ஆயினும் அதை மராட்டியருக்கு விட்டுக்கொடுக்கும் நிலைமை ஏற்பட்டது. மைசூரும் அவனை நெருக்கத் தொடங்கிற்று. சேலமும் கோயமுத்தூரும் அவன் கையைவிட்டு நழுவின. சொக்கநாத நாயக்கன் பல இன்னல்களுக்கு ஆளானான். முஸ்லிம்களும் மராட்டியரும் திருச்சிராப்பள்ளியின்மேல் படையெடுத்தனர். சொக்கநாதன் இராமநாதபுரம், தஞ்சாவூர், மைசூர் ஆகிய தேசங்களுடன் போரிட வேண்டி வந்தது. ருஸ்தும் கான் என்ற முஸ்லிம் நாடோடி ஒருவன் 1687-ல் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றி நாயக்கனின் அரியணையில் இரண்டாண்டுகள் அமர்ந்து இன்புற்றான். ஆனால், சொக்கநாதன் தன் ஆட்சியை மீட்டுக்கொண்டான். நாயக்கனின் அரசாண்மையும், படை பலமும், துணை நலமும், குடிவளமும் எவ்வளவு தாழ்ந்து இருந்திருக்க வேண்டுமென்று இந் நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகின்றது. சொக்கநாதனின் ஆட்சிக் கால இறுதியாண்டுகளில் மைசூர்ப் படைகள் வந்து திருச்சிராப் பள்ளியை முற்றுகையிட்டன. ஆனால், செஞ்சி, தஞ்சாவூர் மராட்டிய மன்னரின் துணையைக்கொண்டு சொக்கநாதன் மைசூர்ப்படைகளைத் திருச்சிராப்பள்ளியினின்றும் விரட்டியோட்டினான். செஞ்சி இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கன் விசயநகரப் பேரரசைத் தொடர்ந்து பகைத்து வந்தான். அவனுடைய வாணாள் எவ்வாறு முடிந்ததென அறியமுடியவில்லை.அவனையடுத்து முடிசூட்டிக் கொண்டவர்களும் அப் பகையை வளர்த்து வந்தனர்; எனினும், அவர்கள் திருமலை நாயக்கனுடன் சார்பு கொண்டிருந்தனர். இக் கூட்டுறவு சீரங்கனின் முயற்சிகள் தோல்வியுறுவதற்குக் காரணமாக இருந்தது. கோல்கொண்டாவின் சேனைகள் மீர்ஜு ம்லாவின் தலைமையில் செஞ்சியை முற்றுகையிட்டன (1647). திருமலை நாயக்கன் பீஜப்பூர்ச் சுல்தானுடன் ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டு, அவன் அனுப்பிய 17,000 குதிரை வீரர்களைக் கொண்ட ஒரு படையுடனும், 30,000 காலாள்கள் கொண்ட தன் படையுடனும் செஞ்சி நாயக்கனின் மீட்புக்காக விரைந்தான். தஞ்சாவூரில் விசயராகவ நாயக்கன் கோல்கொண்டா சுல்தான் படைகளைக் கொண்டு வெருண்டு அடிபணிந்தான். பீஜப்பூர்க் குதிரைப் படையானது கோல்கொண்டா அணிகளுடன் இணைந்துகொண்டு திருமலை நாயக்கனுக்குத் |