பக்கம் எண் :

104
104

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

    இந்தப் பழைய சித்திரம் அவ்வளவாகச் சிதைந்து அழிந்துவிடவில்லை.
வர்ணம் மட்டும் சிறிது மங்கிவிட்டது. இந்த ஓவியம் சுந்தரமூர்த்தி
நாயனாருடைய வரலாற்றை விளக்குகிறதாக உள்ளது. சுந்தரமூர்த்திகளை
இறைவன் வயோதிகப் பிராமணன் வேடத்துடன் வந்து அடிமை
முறியோலையைக் காட்டி ஆட்கொண்டதும், சுந்தரமூர்த்திகள் சேரமான்
பெருமாள் நாயனாருடன் கயிலையங்கிரிக்குச் செல்வதும், கயிலையங்கிரியில்
பரமசிவன் பார்வதியுடன் வீற்றிருக்கும் காட்சியும், இசைப்
பாடல்களுடனும் இசைக்கருவிகளுடனும் சிலர் நடனம் ஆடும் காட்சியும்
இந்த ஓவியத்திலே இடம் பெற்றிருக்கின்றன. அன்றியும், இராஜராஜ சோழன்,
கருவூர்த்தேவர் முதலியவர்களின் ஓவியங்களும் காணப்படுகின்றன.

 

நாயக்கர் காலத்து ஓவியம்

 

     தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் அரசாண்ட நாயக்கர்
மன்னர்களும் சுவர் ஓவியங்களை அமைத்திருக்கிறார்கள். தஞ்சை நாயக்க
அரசர், தஞ்சைப் பெரிய கோயிலில் அமைத்த ஓவியங்களை மேலே
குறிப்பிட்டோம். மதுரை நாயக்கர் ஓவியங்கள், மதுரை மீனாட்சியம்மன்
கோயில் முதலிய இடங்களில் இருக்கின்றன.

 

    பழைய கோயில்களிலே இன்றும் சில ஓவியங்கள் மறைந்துள்ளன.
அவை முற்காலத்து ஓவியங்களும் பிற்காலத்து ஓவியங்களுமாக இருக்கும்.
இவற்றையெல்லாம் கண்டுபிடித்துப் பாதுகாக்க வேண்டும். பழைய பல்லவர்
காலத்துக் கோயில்கள் சிலவற்றில் இடைக்காலத்து ஓவியங்களும் பிற்காலத்து
ஓவியங்களும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். உத்தரமேரூர்
மாடக் கோயிலில் சுவர் ஓவியங்கள் உள்ளன. பிற்காலத்து ஓவியங்களாக
இருந்தாலும் அவற்றையும் பாதுகாக்க வேண்டும்.