பக்கம் எண் :

கட

கட்டடக் கலை

31


 

மரக் கோயில்களைவிட உறுதியானவும் நெடுநாள் நீடித்திருக்கக்
கூடியனவுமாக இருந்தன. இவைகளும் சில நூற்றாண்டுகள் வரையில்தான்
நீடித்திருந்தன. செங்கற் கட்டடங்கள்,ஏறக்குறைய 200 அல்லது 300
ஆண்டுகளுக்கு மேல் நிலைபெறுவதில்லை. கி.பி.600-க்கு முற்பட்ட
காலத்திலே இருந்த நமதுநாட்டுக் கோயிற் கட்டடங்கள் எல்லாம் செங்கற்
கட்டடங்களே.
 

        சங்க காலத்திலே கட்டப்பட்ட கோயில்கள், செங்கற்
கட்டடங்களையும் மர விட்டங்களையும் கொண்டு அமைக்கப்பட்டு,
சுவர்மேல் சுண்ணம் பூசப்பட்டிருந்தன. இத்தகைய செங்கற் கட்டடக்

கோயில்கள் அவ்வப்போது செப்பனிடாமற்போனால், அவை சிதைந்து
அழிந்துவிடும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சங்கப்
புலவர், இடிந்து சிதைந்துபோன செங்கற் கட்டடக் கோயில் ஒன்றைக்
கூறுகிறார்.

 

     ‘‘இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென

    மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து

    எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று

    ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை’’1

 

என்பது அச்செய்யுட்பகுதி.

 

     கடைச் சங்க காலத்தின் இறுதியில் இருந்த சோழன் செங்கணான்,
சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் ஆக எழுபதுக்கு மேற்பட்ட
கோயில்களைக் கட்டினான். இதனை, 

 

    ‘இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோ ளீசற்கு

    எழில்மாடம் எழுபதுசெய் துலக மாண்ட

    திருக்குலத்து வளச் சோழன்’’

 


1. அகநானூறு 167, கடியலூர் உருத்திரங் கண்ணனார்.