பக்கம் எண் :

42

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

மாடக்கோயிலின் அமைப்பு ஆகும். இந்த மாடக்கோயில்களின் அமைப்பைக்
கருங்கற் பாறையில் அமைத்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் மத்திய
காலம் ஆகும். இவை பழைய செங்கற் கட்டடங்களாலாய
மாடக்கோயில்களின் உருவ அமைப்புடையவை.

 

வேறு மாடக்கோயில்கள்

 

     கற்றளியாக அமைக்கப்பட்டு இப்போதும் வழிபாட்டில் உள்ள
மாடக்கோயில்கள் இரண்டு உள்ளன. அவை காஞ்சிபுரத்தில் உள்ள
பரமேச்சுர விண்ணகரமும், உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் ஆலயமும்
ஆகும். காஞ்சிபுரத்துப் பரமேச்சுர விண்ணகரத்தை இப்போது வைகுண்டப்
பெருமாள் கோயில் என்று கூறுவார்கள். இக்கோயிலைப் பரமேசுவர வர்மன்
என்னும் பல்லவ அரசன் கி. பி. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
கட்டினான். இதனைத் திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார். இது மூன்று
நிலையுள்ள மாடக்கோயில். ஆனால், இரண்டாவது மாடிக்கு மட்டும் படிகள்
உள்ளன. மூன்றாவது மாடிக்குப் படிகள் இல்லை. பண்டைக் காலத்தில்
மரப்படிகள் அமைந்திருந்தன போலும்; இப்போது மரப்படிகளும் இல்லை.
இது மூன்று நிலை மாடக்கோயில் ஆகும்.

 

     உத்தரமேரூர் மாடக்கோயிலும் மூன்று நிலை மாடக் கோயிலாகும்.
இதனைக் கட்டியவன் நந்திவர்ம பல்லவமல்லன் என்னும் பல்லவ அரசன்.
இவன் கி.பி.730 முதல் 795 வரையில் அரசாண்டான். எனவே இக்கோயில்
கி.பி.8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலைக்
கட்டிய பல்லவனுடைய உருவச் சிற்பமும் இக்கோயிலில் இருக்கிறது.

 

கட்டட அமைப்பும் உறுப்புகளும்

 

     கோயிற் கட்டட அமைப்பைப் பற்றியும் அவற்றின் உறுப்புகளைப்
பற்றியும் ஆகம நூற்களிலும் சிற்ப