பக்கம் எண் :

164தமிழ்க்காதல்

என்பது ஒரு தலைவனின் முடிபு. காதலன் பிரிவதை முன்னுணர்ந்த தலைவி
என்னையும் உடன் கூட்டிக்கொண்டு செல்லுக என்றாள். செல்லும் வழியில்,
கிளிக்காதலியே, காடு உண்டு, தண்மையில்லை; ஆறு உண்டு நீரில்லை; மரம்
உண்டு நிழலில்லை. அன்ன வெங்கானத்திடையே நீ வரலாமா? என்று நயமாக
மறுத்தான் தலைவன்.     

   
அனைவரும் வெம்மைய காடெனக் கூறுவீர்
    கணைகழி கல்லாத கல்பிறங் காரிடைப்
    பனையெருத் தெழிலேற்றின் பின்னர்ப்
    பிணையுங் காணிரோ? பிரியுமோ அவையே     (கலி.20)


     நல்லது, அக் கடுங்காட்டின் கண், ஐய, ஒருகாளை நிற்கவும் அதனைப்
பிரியாதே ஒரு பசு நிற்கவும் கண்டதில்லையா? காடு வெம்மை என்றதற்காக
அவை பிரிந்து நிற்கின்றனவா? என இணைபிரியா நிலையை
நினைவூட்டுகின்றாள்; இயற்கையிலிருந்து காதற் காட்சியை எடுத்து
மொழிகின்றாள் தலைவி.


     கணவன் வருவேன் என்று குறித்த பருவத்து வந்தானல்லன். அவன்
தாழ்த்து வருவதற்காகப் பருவம் தாழ்த்து வருமா? பருவ வரவுகண்டு
மனமகிழ்ந்தாள் மனைவி. இதோ விடியற்காலை வருவார். இல்லை, இல்லை;
அதோ பகற் காலத்து வந்துவிடுவார். இல்லை, இல்லை; கட்டாயம் இரவில்
வந்தே தீருவார்; என இவ்வாறு அவள் பேதையுள்ளம் ஏங்கியேங்கி
அமைதியடைந்தது “யாண்டு உளர் கொல்லோ. தோழி, ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே” என்று தோழியிடம் புலம்பினாள்.


     கார்ப்பருவத்தில் காதற் முகிழ்க்கின்றது. எல்லா உயிர்களும் பாலின்பம்
துய்ப்பான் நெருங்கி இணைகின்றன, அணைகின்றன. காதல் என்பது ஓர்
பருவகாலப்பயிர். காலையில் அரும்பும், பகற்காலத்துப் போதாகும், மாலையில்
மலர்ந்து மணம் வீசும் என்றார் முப்பாற் புலவர். மக்கள் காதற் பயிரைப்
பிறவுயிரினம்போல இயற்கையொடு பொருந்த வளர்க்கவேண்டும்.

இயற்கை துணையாகத் துய்த்தல் வேண்டும். மழைசெறிந்து வளம்பொழிந்து
இரவுகுளிர்ந்த மாரிக்காலத்து எல்லா உயிர்களும் தத்தம் இணையை விழைந்து
நிற்கும் நிலையில், உயர்திணை எனப் பெயரிய மனிதவினம் மட்டும் பொருள்
காரணமாகவும் போர் காரணமாகவும் இணைவிழைவைத் துறந்து இயற்கைக்குப்
புறமாகத் தனித்திருத்தல் பொருந்துமா? திருமணத்தால் உயிர்மெய்யாக
ஒன்றினவர்கள் அங்ஙனம் வாழாது உயிரும் மெய்யுமாகப் பிரிந்திருத்தல்
ஒல்லுமா? யாண்டு தனித்திருந்தாலும் பிரிந்திருந்தாலும் இளந்தலைமக்களை
இயற்கையுயிர்ச்சோடிகள் வாளாவிடா. அஃறிணைப் பிணையல்களைக்
காணும்போது, அவற்றின் புணரொலிகளைக் கேட்கும் போது, இளம்
உள்ளங்கள் பாலுணர்வை எண்ணும், எண்ணும்.