பக்கம் எண் :

அகத்திணைத் தோற்றம்165

    புன்புறப் பெடையொடு பயிரி இன்புறவு
    இமைக்கண் ஏதாகின்று               (குறுந்.285)

அகத்து எழும் பால்வேட்கையைப் புறத்தே கணவனுக்குங் கூடக் காட்டாது
ஒளித்துக் கொள்ளும் நிறையுடையது பெண் பிறவி என்பர். புறத்துப்
புலனாகாது ஒடுக்கிக்கொண்டாலும், காதற் கலவைகளைக் கண்ணுறும்போது,
இளைய உள்ளத்தைக் காமத்தீ கதுவவே செய்யும். இது நிறையுடைப்
பெண்ணிற்கு விலக்கன்று. தலைவியின் வீட்டில் புறாக்கள் வளர்கின்றன.
மாரிப்பருவம் வந்ததும், ஆண்புறா இன்பக் குரல் எழுப்புகின்றது. இன்னொலி
கேட்ட பெண்புறா விரைந்தோடி வந்து அருகணைகின்றது. குறித்த
கூட்டின்பத்தைப் புறா அடையக் காண்கின்றாள் வீட்டுத் தலைவி. தனித்துத்
திரிந்த இவை
நொடிப்பொழுதில் என்னாயின, என்ன இன்பம் பெற்றுவிட்டன
(இமைக்கண் ஏதாகின்று) என்று வியந்து விம்மி ஏங்குகின்றாள். புறாக்கூடல்
அவளின் நிறை நெஞ்சைப் பொத்துவிட்டது. பொருளீட்டச் செல்லும் கணவன்
போகும் வழியில் ஆண்புறாக்களின் அழைப்புக் குரல்களைக் கேட்பான்;
அவை பெண்புறாக்களை விழைந்து பயிருகின்றன என்று உணர்வான்.
அப்போது என்னை நினைவான், வேற்றூரில் தங்கான், விரைந்து மீள்வான்
என்று ஒரு தலைவி சொல்லிக் கொள்கின்றாள். (குறுந்.79) புறாவின்
புணர்குரல் கேட்பின், தமிழினத்தின் இருபாலர்களும் காதற் கலக்கம்
கொள்வார்கள் என்று இப்பாடல்களால் அறியலாம்.     

   
உள்ளார் கொல்லோ? தோழி கள்வர்தம்
    பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
    உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
    செங்காற் பல்லி தன்துணை பயிரும்
    அங்காற் கள்ளியங் காடிறந் தோரே       (குறுந்.16)


     பிரிந்து பேதுறும் தலைவிக்கு ஆறுதல் மொழியும் தோழி பாட்டு இது.
‘கள்ளிக்காட்டின் வழியே சென்ற நம் தலைவர் நின்னை நினைப்பார்.
வழிக்காட்சி நின்னை நினைப்பிக்கும். ஒரு சிறு ஆண்பல்லி தன் பல்லி
மனைவியை ஆர்வத்தோடு அழைக்கும் இன்குரல் அவர் செவியில் வந்து
விழும். விழுந்த பின், அவர் உள்ளத்தைக் காதல் அரிக்கும். அரிக்கவே
காதற் பிடியான நின்னை எண்ணுவர். எண்ணி மீள்வர்’ எனத் தோழி அமைதி

மொழிகின்றாள். பயிருதல் என்னும் தமிழ் வினைச்சொல் குரல்காட்டி அழைத்த
என்ற பொருளுடைய தேனும், காதற்குறிப்பு உடையது. யார் யாரையும்
அழைத்ததற்கு இச்சொல் ஆளப்படுதல் இல்லை. அஃறிணை ஆணினம் தன்
பெண்ணினத்தை அணைய அழைக்கும் மிடத்துத்தான் சங்கப் புலவர்கள்
இவ்வினைச் சொல்லைப் பெரிதும் கையாண்டுள்ளனர்,