பக்கம் எண் :

அகத்திணைத் குறிக்கோள்175

அகப்பொருள் நூல்களும் பல. இந்நூற்றாண்டில் அகம்பற்றி எழுதிவரும்
உரைநடை நூல்களும் பலப்பல. எந்நூல்களும் அகத்திணையின்
அடிப்பண்புகளைத் துருவித் துளைத்துப் பன்மாணும் காண முயன்றதில்லை.
மேலும் மேலும் இலக்கிய விளக்கம் செய்ய முயன்றனவேயன்றி.

முதன்மையான இலக்கணத் தெளிவு செய்ய முனைந்தில. வழி வழி வந்த
ஒன்று உண்மையாகி விடாது. பெரும்பிழையானவை மரபாயினும் புரட்டித்
தள்ளப் பின்வாங்குதல் கூடாது. எஞ்ஞான்றும் முதனூலாசிரியன் கருத்தைக்
கண்டுகொள்ளத் துணிவு வேண்டுமேயன்றி, வழிவந்த சான்றோர்
கருத்துரையில் மயங்கி அறிவு முனைப்பை மழுக்கிவிடக் கூடாது.1
மூலவாராய்ச்சிக்கு என்றும் முதன்மை அளிக்க வேண்டும். புகழ் சான்ற
அறிஞர்களின் முடிபுகளைத் திறங்காண்பதால், எம்மனமும் கசப்புறும்.
அவர்தம் அறிவுத் துணிபுகளைப் பிழையெனக் காண்பதால் யார்க்கும்
மனமாசில்லை காண். உண்மை வளர்ச்சியே நல்லறிஞர்களின் நோக்கம்.
அகத்திணையின் அடித்தன்மைகளை ஆராய்வான் முனையும் எனக்கு,
மேற்றொட்டு வந்த கருத்துக்களை அலசிக் காண்டல் தவிர்க்க முடியாது.
அகவிலக்கணத் தெளிவின்றி அகவிலக்கியங்களைக் கசடறக் கற்றல் என்பது
உடலியல் அறியாதான் கற்ற மருந்தியலை ஒக்கும்.


                              II


அகத்திணையின் முப்பிரிவுகள்


     கைக்கிளை பெருந்திணைகளின் உண்மைப்பொருளை அறிய
முயலூங்காலை, அவை அன்புசான்ற அகத்திணையின் உட்பிரிவுகள்
என்பதனை மறந்துவிடலாகாது. மற்றொரு உட்பிரிவாம் சிறந்த ஐந்திணையோடு
எழுதிணையாக உடன் எண்ணப்படுவன என்பதனையும் நினைக்கவேண்டும்.
அகத்திணையாவது ஒன்றற்கொன்று சிறிதும் தொடர்பில்லா ஏழு
தனித்திணைகளின் வெறுந் தொகுதியன்று. ஒவ்வொரு திணையையும்

தனித்தனியாகப் பாடலாம் என்பதனால், அவை தம்முள் முற்றும்
தொடர்பற்றவை மாறுபட்டவை என்று கொள்ளற்க. ஒன்றின்கீழ் உட்பிரிவுகள்
வருமேல், அப்பிரிவுகளுக்கெல்லாம் ஒரு பொதுத்தன்மை இருக்கும்; இன்றேல்,
அவ்வொன்றன்கீழ் வருவது முறையில்லை. கைக்கிளை, பெருந்திணை,
ஐந்திணை என்ற மூன்றும் அகத்திணையின் உட்பகுதிகள். அகத்திணையின்
தன்மை எது? அது இம்முப்பகுதியிலும் காணப்படுதல் வேண்டும்.
உட்பகுதிக்கு ஒரு தனித்தன்மை இருக்கும். அத்தன்மையோடு
மூலத்தொகுதியின்

 ____________________________________________________
     1. Dr. A. Chidambaranathan: Advanced Studies in Tamil
       Prosody, P.3.