பொதுத்தன்மையும் இருக்கும். அகத்திணையுள் ஐந்திணை பாடல் சான்ற புகழ்த்திணை, பல்துறையுடைய திணை. ஆதலின் ஐந்திணைக்குச் சிறந்த தனித்தன்மையுண்டு; மிக்க பொதுத் தன்மையுண்டு. ஐந்திணை போலக் கைக்கிளை பெருந்திணைகள் சிறப்பில்லை, பாடல் பெறவில்லை என்றாலும், அவையும் அகத்திணையின் உட்பிரிவுகள் அல்லவா? அகத்திணைக்கு ஒரு நற்பண்பு உண்டெனின், அப்பொதுப் பண்பு அவ்விரு உட்பிரிவுகளுக்கும் இருக்கத்தானே வேண்டும்? ஐந்திணை நல்ல திணையாயின்’ அதனொடு வைத்து எண்ணப்படும் கைக்கிளை பெருந்திணைகளும் நல்லனவாகத்தானே இருத்தல் வேண்டும்? இம்முறையான் ஆராயின், இவ்விருதிணைகளின் தூய்மையும் மேன்மையும் வெளிப்படும். அகத்திணை, கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணை இவற்றின் இலக்கணங்களைத் தொல்காப்பியர் கூறிற்றிலர். கைக்கிளை பெருந்திணைகட்கு (தொல். 995, 996) இரண்டு நூற்பாக்களில் இலக்கணம் கூறினாற்போலத் தோன்றும். ஆண்டுக் கூறியிருப்பவை இலக்கணம் அல்ல; அவ்விருதிணை பற்றிய காதற் செய்கைகள். அதுபோல் ஐந்திணைக்கும் வருஞ் செய்கைகளையெல்லாம் துறையாக வகுத்துக் காட்டினரே யன்றி இலக்கணம் சுட்டவில்லை. அவ்வவற்றிற்கு வரும் துறைகளையும் கொண்டுதான் திணைகளின் இலக்கணத்தை வடிக்க வேண்டும். உட்பிரிவுகளின் இலக்கணத்தைத் தனித்தனி கண்டு, பின்னர் அவற்றை ஒருசேரக்கொண்டு அகத்திணை என்னும் பொதுப்பெயரின் பொது விலக்கணத்தை உணர வேண்டும். இலக்கணம் கண்டு பிடிக்க இடர்ப்பாடுகள் உள என்பது இதனால் விளங்கும். தொல்காப்பியத்திற்குப் பின்னெழுந்த இலக்கண நூல்கள் பொருளதிகாரக் குறியீடுகட்கு இலக்கண வரையறவுதருகின்றன. அகப்பொருள் விளக்கம் என்பது நாற்கவிராச நம்பி யாத்தது. இந்நூல் பலராலும் போற்றிக் கற்கப்படுவது. “கைக்கிளை யுடையது ஒருதலைக் காமம்” “ஐந்திணை யுடையது அன்புடைக் காமம்” “பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்” ஒருதலை, அன்புடை, பொருந்தா என்ற அடைகளால் திணைகளின் காமத்தன்மையையும் வேறுபாட்டையும் மொழிவர் அகப்பொருள் நம்பி. இந்த அடைகளைக் கற்ற மாத்திரத்தில் அன்புடையது ஐந்திணைதான் எனவும், பிற இரண்டும் அன்பற்றவை எனவும் யாரும் கருத்துக்கொள்வர். அங்ஙனமாயின், ஒன்று வினவுவல்: |