பக்கம் எண் :

அகத்திணைத் குறிக்கோள்177

    மலர்தலை யுலகத்துப் புலவோர் ஆய்ந்த
    அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை
    பெருந்திணை யெனவெழு பெற்றித் தாகும்

     என்ற நூற்பாவால் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்பன
அகப்பொருளின் வகைகள் என உடன்படுவர் நம்பியார். வகைகளின் தன்மை
அவர் கூறியபடி, ஒரு தலையும் அன்புடைமையும் பொருந்தாமையும் என்றால்,
மூலப்பெயரான அகம் என்பதன் தன்மை என்ன? அகம் என்பதற்கு ஒரு
தன்மை உண்டெனின், அப்பொதுமை அதன் முக்கூற்றிலும் கலந்து காணப்பட
வேண்டுமன்றோ?


                              III     

1. கைக்கிளைக் குறிக்கோள்

    காமஞ் சாலா இளமை யோள்வயின்
    ஏமஞ்சாலா இடும்பை யெய்தி
    நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
    தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
    சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல்
    புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே   (தொல். 995)

என்பது கைக்கிளைத் திணையின் நூற்பா. இதற்கு யான் கருதிய பொருள்:
பருவம் எய்தாப் பெண்ணை (பருவம் எய்தியவளாக மயங்கி) ஒருவன் காதல்
கொள்கின்றான்; காதற்றுன்பமும் படுகின்றான்; நன்மை எனவும் தீமை எனவும்

அவளைத் தன்னோடு உறவுபடுத்திச் செருக்குக் கொள்கின்றான்;
அவளிடமிருந்து மறுமொழியாக ஒரு சொல்லும் பெற்றானில்லை; எனினும்
தானே சொல்லிச் சொல்லி இன்புறுகின்றான்.


பொருள் விளக்கம்


     ‘காமஞ் சாலா இளமையோள்’ என்ற தொடரைக் கொண்டு இருவகைக்
கருத்துரைக்க இடமுண்டு. ஓர் இளைஞன் பெண்ணொருத்தியைக் கண்டு
காமவுணர்வு கொண்டான். இவன் இங்ஙனம் ஆனானேயன்றி அவளிடத்து
யாதொரு குறிப்பும் தோன்றவில்லை. அதனால் இவள் காமத்திற்குரிய பருவம்
நிரம்பாத பெண் என்று அறிந்துகொண்டான் என்பது ஒரு பொருள். குமரி
எனக் கருதிக் காதலைத் தொடுத்தான் எனவும், ஒத்தோ மறுத்தோ யாதொரு
காதற் சிந்தனையும் அவளிடத்துப் பிறவாமையின், இவள் மலராத முகை
என்று தன் காதல் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டான் எனவும் இதனால்
அறியப்படும். மற்றொரு பொருள், ஆளாகாத