பக்கம் எண் :

180தமிழ்க்காதல்

கின்றான். இவ்விளைஞனது காதற்பதிவை அவள் எதிரேற்கவில்லை,
பாராட்டைச் செவிமடுக்கவில்லை; துயரை உணரவில்லை. இங்ஙனம் தன்னால்
ஒருவன் அவதியுறுகின்றான் என்று அவள் யாதும் அறியாள். ஏன்? அவள்
முன்னின்று கேட்கும்படியாகவும் உணரும்படியாகவும் அவன் நேர்நின்று
யாதும் செய்யான். தன் வாயளவில் தன் உள்ளத்தளவில் காதல் நிலைகளை
ஆக்கிக் கொள்கின்றானே யன்றி, அவளறியப் புறத்துத்தொடர்ந்து யாதும்
செய்திலன் களவு செய்யலாமா, காதலைப் புலனாக்கலாமா என்று அவன்
உள்ளம் அவாவுகின்றது.


     வழிச்செல்வான் ஒருவனது மடி கனமாக இருக்கின்றது என்று
வைத்துக்கொள்வோம். களவெண்ணம் உடையவன் என்னவெல்லாம்
கருதுவான்? இம்மடி வயிற்றுக் கனமா? பொருட்கனமா? அப்பொருளும்
மதிப்புடையதாக இருக்குமா? வழிச்செல்வான் பறிகொடுத்து விடத்தக்க
இயல்புடையவனா? என்று இங்ஙனம் உள்ளப்பூசல் தன்னுள் கொள்வான்.
இவனைப் பற்றியும் இவனது உள்ளோட்டம் பற்றியும் வழிஞன் ஒன்றும்
அறியான். இந்நிலையினளே காமஞ்சாலா இளமையோள். அவன்
தன்பாட்டுக்குப் போவதும் வருவதும் செய்வதும் செய்கின்றான். இவனாக
ஒன்றை நினைத்து அவாவிக் கவல்கின்றான்:     

   
நேர்சிலம் பரியார்ப்ப நிரை தொடிக்கை வீசினை
    ஆருயிர் வௌவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள் (கலி. 58)

     சிலம்பு ஒலிப்பக் கைவீசி என்னுயிரைப் பறித்துக்கொண்டு அறியாது
செல்கின்றவளே என்று, தன்னுயிரைத் தானே பறிகொடுத்துக் புலம்புகின்றான்.
அவளிடத்து எச் சிறுமாற்றமும் தோன்றாமையின்,     

    பேதுற்றாய் போலப் பிறரெவ்வம் நீயறியாய்
     யாதொன்றும் வாய்வாளா திறந்தீவாய் கேள்    (கலி. 56)

என்று ஓரளவு உண்மையை உணர்ந்து அந்நல்லிளைஞன் தன் காதலரும்பைக்
கிள்ளிக் கொள்கின்றான். இவன் மயக்கத்திற்கெல்லாம் ஒரே காரணம் கண்ட
பெண் குமரிபோலும் தோற்றம் உடைமைதான். இம்மயக்கத் தோற்றத்தின்
நிலைக்களத்தில் கைக்கிளைக்காதல் உருவாகின்றது. எனவே அகத்திணைக்
கைக்கிளை என்பது காமப்பருவத்தை இன்னும் எய்தாத (அணிமையில் எய்தக்
கூடிய) பெதும்பைப் பெண்ணைத் தோற்றத்தால் குமரி என மயங்கிப் பருவம்
வந்த இளைஞன் அறியாதே தன்னுட் புலப்படுத்திய காதல் முகிழ்ப்பைமட்டும்
கூறியமைவது. இவ்வளவில் இத்திணையின் காமப்பொருள் முடிவடையும்.