பக்கம் எண் :

184தமிழ்க்காதல்

அவனது முதன் முயற்சியைப் புலப்படுத்துவர். ஆதலின் ஒருபுடைக்காமம்
ஆகிய அகத்திணைக் கைக்கிளைக் கண் ஆண்பால் ஒன்றே இடம்பெறுதல்
இயல்பும், தமிழ்ச் சமுதாய முறையுமாம்.


குழந்தை மணம் இல்லை


     காமக்குறிப்பில்லாப் பேதையிடத்து நிகழும் கைக்கிளையைத்
தொல்காப்பியர் முதற்கண் எடுத்தோதுதலால் தமிழ்நாட்டிற் சிறுமிகளை
விரும்பிவந்த வழக்கம் முன்பு இருந்தது போலும் என்று சிலர் கருதுவர்.1
அங்ஙனம் ஒரு சமுதாய வழக்கு இருந்தமையாற்றான், கைக்கிளைத்திணை
வகுக்கப்பட்டது என்று கருத்துறுத்த முயலுவதில் தவறில்லை. அகத்திணை
தமிழ்ச் சமுதாயப் பழக்க வழக்கங்களை நிலைக்களனாகக் கொண்டே
படைக்கப்பட்டது என்பதனை நெடுக இந்நூலின்கண்வலியுறுத்தி வருகின்றேன்.
இந்நிலையில் இக்கைக்கிளைக்கும் ஒரு சமுதாய வழக்கு உண்டா? என்று
கண்டாக வேண்டும். “காமஞ்சாலா இளமையோள்” என்பதற்கு இதுகாறும்
பேதைச் சிறுமி என்று பொருள் கண்டனர். அப்பொருள் பொருளாயின்,
(பொருளில்லை) பேதைப் பெண்ணைக் காதலிக்கும் மணநெறி தமிழ்ச்
சமுதாயத்தில் இருந்ததாகவே கொள்ள வேண்டும். ஓர் இளைஞன் பேதைப்
பருவத்தியை வெளிப்படையாகக் காதலிப்பதும், அவளின் பெற்றோர் அவன்
காதலை ஏற்று மகளைப் பருவமடையா முன்னரே மணஞ் செய்தலும் ஆகிய
நெறி நடைமுறையில் இருந்திருக்குமேல், அவ்விளைஞன் ஏமஞ்சாலாக்
காமத்துன்பம் அடையவேண்டா, நன்மையும் தீமையும் தொடுத்துக் கூற
வேண்டா, சொல்லெதிர் பெறாது சொல்லியின்புற வேண்டா. பேதைக் காதல்
வழக்கில் இருந்திருப்பின், ஆசிரியர் கூறும் கைக்கிளைத் தன்மைக்கு அது
பொருந்தி வாராமை காண்க. உண்மையாக இருந்திருக்குமேல், அதற்கெனத்
தனித்திணை கண்ட ஆசிரியர் துறைபல வகுத்துப் பேதைப் பெண்ணை

வரையுங்காறும் முறையாக மொழிந்து செல்வர்மன்; பேதையைக் காதலித்தான்,
அவள் குமரியாகும்வரை காத்திருந்தான், காமஞ்சென்ற இளையவளாகியபின்,
மணந்து ஐந்திணைக் காதலன் ஆனான் என்று கைக்கிளைக்கும்
ஐந்திணைக்கும் ஒரு தொடர்பு காட்டியிருப்பர்மன்.


     பேதைக்காதல் வழக்காறாயின், இலக்கணமும் இலக்கியமும் அறநூலும்
அதனைத் தக்கதென்றோ தகாதென்றோ சுட்டுவதில் பிழைபாடு இல்லை.
கிரேக்கப் பேரிலக்கியங்கள் இளஞ்சிறுவனைக் காதலித்தல் முதலான
பாலொழுக்கங்களைப் பாடுகின்றன என்பது நினையத்தகும். தொல்காப்பிய
இலக்கணமும் சங்கஇலக்கியமும் தமிழ்ச்சமுதாயத்தின் பரத்தையொழுக்க
மிகுதியை மறைக்கவில்லை;

 ____________________________________________________
     தொல்காப்பியப் பொருளதிகாரவாராய்ச்சி, ப.15.