ஒரு காலவேற்றுமையால் இரண்டு திங்கள் இயல்புமாறித் தோன்றும் நிலச்செயற்கையே பாலைத்திணைக்கு இடமாம். எனினும், நிலையா நீரில்லா நிலத்திலிருந்து நீடித்து நிலைக்கும் பன்னூறு பாலைப் பாடல்களை விளைவித்துக்கொண்ட சங்க காலச் சொல்லேருழவர்களின் இலக்கிய உழவு அறிவின் கொழுமுனைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இங்ஙன் பாலைத் திணைக்கு ஒருவகையான நிலம் உண்டென்று கொள்ளினும் கைக்கிளை பெருந்திணைகட்கு எவ்வாற்றானும் நிலம் இல்லை என்பது நூன்முடிவு. ஆதலின் எழுதிணை அகப்பிரிவு நிலவடிப்படை கொண்டது என்றாலும் பொருந்தாமை காண்க. திணை ஏழாயினமைக்குக் காரணம் முக்காமத் தன்மையும் அன்று; நானிலப் பாங்கும் அன்று; எழுவகைக் காதலொழுக்கங்களே உரிப்பொருள்களே- ஆம், என்று அறிவோமாக. இவ்வொழுக்கங்கள் தனி நிலைகொண்டவை; தம்முள் தொடர்பு வேண்டி நில்லாதவை என்பது நீள நினையத்தகும் ஒரு சிறப்பியல்பு. ஆதலாலன்றோ குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவை ஒத்த காமத் தன்மையால் ஒன்றாயினும், ஐந்திணை எனத் தனிநிலை குறிக்கும் எண்ணுப் பெயர் பெற்றன. குறிஞ்சி முதலாய குறியீடுகள் அவ்வந்நிலத்துக்கு உரிய மலர்களின் பெயர்களே என்றும், இப்பெயர்கள் பின்னர் உரிப்பொருள்களைப் புலப்படுத்தும் குறியீடுகளாயின என்றும் கருதுவர் ஒரு சாரார்1. அற்றன்று என மறுத்துக் குறிஞ்சி முதலாயவை புணர்தல் முதலாய உரிப் பொருள்களை முதற்கண் தருவன எனவும் பின்னரே மலர்களையும் நிலங்களையும் குறிக்கப் போந்தன எனவும் கருதுவர் மற்றொரு சாரார்.2 முதற்பொருள் எது? வழிப்பொருள் எது? எனத் துணிவதில் இன்னோர் மாறுபடுவர். இருவகைப் பொருளும் குறிஞ்சி முதலாம் சொற்களுக்கு முன்னோ பின்னோ உண்டு என்பதிலும், அகத்திணையிலக்கணம் வகுத்த நாளில் இருபொருளும் வழங்கின என்பதிலும் இன்னோர் வேறுபட்டிலர். எனினும் கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் எழுதிணை என எண்ணுங்கால், குறிஞ்சி முதலாம் சொற்கள் தரும், தரவேண்டும் பொருள்கள் என்ன? நிலமில்லாக் கைக்கிளை பெருந்திணைகளோடு எண்ணப்படுதலின், இவற்றுக்கு நிலப்பொருள் செய்தல் ஆகாது; உரிப்பொருள் கோடலே முறை என்பது தெளிவு. ஐந்திணையுள் அடங்கிய ____________________________________________________ தொல் -பொருள். ரு. இளம்பூரணம்; தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ப. 24; பழந்தமிழர் நாகரிகம்; ப. 18: Studies in Tamil Literature and History P. 273. இறையனார் அகப்பொருள். பவானந்தர் கழகப் பதிப்பு, ப. 25; தொல். பொருள். ரு. நச்சினார்க்கினியம்; டாக்டர் பாரதியார். தொல், அகம். பாயிரம்; இளவழகனார் அகத்திணையியல் விளக்கம், ப. 87-89. அடிக்குறிப்பு. |