பக்கம் எண் :

354தமிழ்க்காதல்

செய்துள்ளனர். அஃதாவது பிறர் நூறுகள் மிகப் பல்துறை பற்றியன.
பேயனாரோ ஒரு துறையில் பப்பத்து உள்ளங்களைக் காட்டுவர்; துறையைப்
பலவாக்கி உள்ளங்களைப் பலவாக்காமல் (அஃது எளிது), துறை
யொன்றின்மேல் உள்ளப் புனைவு பலவாறு செய்குவர். தலைவியின் இல்லஞ்
சென்றுவந்த செவிலி தன் உவகையைச் சொல்லும் துறையிற் பத்தும், தலைவன்
சென்ற சுரம் இனியது என்று தோழி ஆற்றுவிக்கும் துறையிற் பத்தும்,
வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப் பாகனுக்குக் கூறும் துறையிற் பத்தும்,
வினைமுடித்துப் புகுந்த தலைவன் தலைவிக்குச் சொல்லும் துறையில்
ஐந்தும்,குறித்த காலத்திற்கு முன்னே தலைவன் வந்தது உரைக்கும் துறையில்
ஐந்தும் ஆக உள்ளோட்டங்களைப் புலப்படுத்துவர் பேயனார்.

     புலவரின் அகத்தலைவன் போர் மறவன், வேந்தன் துணைவன், இல்லற
நினைவன். போர் குறித்த காலத்துள் முடியவில்லை; பகைவர் திறை
கொடாமையால் இகல் நீளுகின்றது, பாசறைக்கண் இருக்கும் தலைவன் தான்
சொல்லிய பருவ வரவு கண்டு தலைவி கவல்வாளே என்று எண்ணிப்
பார்க்கின்றான். வேந்தன் போர்த்தொழிலை விடுவானேல், எவ்வளவு
தொலைவாயினும் ஒல்லெனச் சென்று இளம்பிறை போலும் அவள்
நுதற்கவினைக் காண்போம் என்று (ஐங்.344)ஏங்குகின்றான்.     

   
அறுவனப் பெய்த அலர்தா யினவே;
    வேந்துவிட் டனனே; மாவிரைந் தனவே
    முன்னுறக் கடவுமதி பாக
    நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே      (ஐங்கு.483)


     வினை முடித்ததும் மறத்தலைவனுக்குக் காதல் பொங்குகின்றது. உவகை
பீறிடுகின்றது. குதிரையைத் தூண்டுமாறு பாகனைத் தூண்டுகின்றான்.
இப்பாவின் சிறு தொடர்கள் அவனது பல் உவகைகளைக் காட்டுகின்றன.

     போர் முடிந்த தலைவனது காதற் பாங்குகளை வேறு வேறு வகையால்
புனைகுவர் பேயனார். பாகனுக்குச் சொல்லும் சொற்களிலும், வருவழிக்
காட்சிகளிலும் அவன் உள்ள மயக்கத்தைத் காணலாம். தேர்ப்பாகனது விரைவு
தலைவனது உள்ள விரைவுக்குக் குறைவாகவே தோன்றுகின்றது.
நேரிழையாளை மறந்த காலம் பெரிது ஆதலின் தாற்றுக் கோலால்
குதிரையைக் குத்தி விரைவு செய்க. (“முள்ளிட்டு ஊர்மதி வலவ”) எனத்
தேர்வலவனை ஏவுகின்றான் காதற்றுடியன். வினை நீட்டித்தவிடத்தும்,
கார்ப்பருவம் வந்த போதும், பாணன் தூதுவரக் கண்ட காலையும் தலைவியை
எண்ணுதலால், தலைவனது காமவுணர்வு பெறப்படும். அன்ன உணர்வினன்
ஆதலின் சிலபோது சொல்லிய பருவத்திற்கு முன்னேயே வந்து தலைவியொடு
மகிழ்கின்றான். பொருநனாயினும் காதலியின் வேட்கையை மதிக்கின்றான்.
மதித்தொழுகவேண்டும் என்பது பேயனார் காட்டும் அகத்திறம். புதுப்புனலில்