பக்கம் எண் :

அகத்திணைப் புலவர்கள்355

பரத்தையரொடு தலைவன் நீராடுகின்றான் என்றும், அது மனைவியின்
ஊடலுக்குக் காரணமாயிற்று என்றும் புலவர்கள் பாடுவது பொதுவழக்கு.
பேயனாரின் தலைவன் நல்ல குடும்பத் தலைவன்; செவ்விய வாழ்வினன்.
சிதறு படாத நெஞ்சினன்; இனிய இன்பச் செயலன்.     

   
ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்
    கரர்தொடங் கின்றாற் காமர் புறவே;
    வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்
    தாழிருங் கூந்தல் வம்மதி விரைந்தே      (ஐங்.411)


பிரிந்து சென்ற கணவன் கார் காலத்துக்கு முன்னே வந்து மனையாளிடம்
சொல்லும் பாட்டு இது. “கூந்தல் அழகி, வா. புதுப்புனல் ஆடுவோம்” என்று
அழைக்கின்றனன். உடன் அழைத்துச் சென்று முல்லைக்காட்டின் இயற்கை
வனப்புக்களைக் காட்டி இன்புறுகின்றான். “நின் நெற்றி போல மணக்கும்
முல்லை வனத்தில், நின் சாயல் போலும் மயில் ஆடுவதைக் காண்;
பறவைகளும் இணையொடு கூடித் திரிவதைக் காணாய்” என்று
காண்பிக்கின்றான் கணவன்.     

  
 உயிர்கலந் தொன்றிய செயிர்தீர் கேண்மை
    பிரிந்துறல் அறியா இருந்து கவவி
    நம்போல் நயம்வரப் புணர்ந்தன
    கண்டிகும் மடவரல் புறவின் மாவே        (ஐங். 419)


உயிர்க்கலப்பு ஒன்றிய கேண்மை, பிரிவறியாமை, மெய்யணைவு இவை காதற்
பண்புகள். இப்பண்புகள் உடைய நம் புணர்ச்சி போலவே, முல்லைநில
உயிர்களும் இனிது கூடிக் குலவுவதைச் சுட்டி உணர்த்துகின்றான் தலைவன்.
பேயனாரின் இம்முல்லைப் பகுதிகள் குடும்ப நல்லுறவைக் கற்பிப்பன.
களவிலும் கற்பிலும் காதற்றுறையில் முன்சொல்லி முன்னியங்க வேண்டுபவன்
ஆடவன் ஆவான். அவனது காதலியக்கம் தலைவியை இயக்கும்; நாணத்தால்
உள்ளோடிக் கொண்டிருக்கும் அவனது ஆர்வத்தைப் புலனாக்கும்.
அகத்தலைவன் காலம் நீட்டித்துத் தலைவியை இரங்கவிடாதபடி, வந்து கலந்து
புணர்ந்து அமர்ந்து மகிழ்ந்து எழிற் காட்சிகளைக் காட்டி விதிக்கின்றான்
என்று கற்கும்போது, பேயனாரின் படைப்பு வடிவிலக்கியம் என உணரலாம்.
புனையவேண்டி இல்லறத்தின் ஊடுபாடுகளைக் கொள்ளாது, ஒழுக்கப்
பாடுகளின்மேல் செய்யுள் தொடுக்கும் இயல்பான ஆற்றல் உடையவர்
பேயனார் என்று உணரலாம். “இனிது கழிப்பின் இளமையும் இனிது, இனியவர்
புணர்ச்சியும் இனிது” என்று தலைவன் இளமையையும், அப் பருவக்
காமத்தையும், அக்காமத்தைக் கார்ப்பருவத்தில் நுகர்வதையும், புணர்வுப்
பொலிவுகளைக் கண்டு காட்டி இன்புறுவதையும் நல்வாழ்வாக மதிக்கும்போது
பேயனாரின் தலைவன் பின்பற்றத் தக்கவன் என்றுபடும்.