தாமே அகலக் காண்போம். நான்காவது இயலில் இதுகுறித்த ஆராய்ச்சி யெல்லாம் நிகழும். இப்போது இவ்விருதிணைகளின் செய்திகளை, நான் கருதியபடி குறிப்பிடுவேன். கைக்கிளை பருவம் எய்தாப் பெண்ணை (பருவம் எய்தியவளாக மயங்கி) ஒருவன் காதல் கொள்கின்றான், காதற்றுன்பமும் படுகின்றான்; நன்மை எனவும் தீமை எனவும் அவளைத் தொடர்புபடுத்திச் செருக்குகின்றான்; அவளிடமிருந்து மறு மொழியாக ஒரு சொல்லும் பெறவில்லை; எனினும், தானே சொல்லிச் சொல்லி இன்புறுகின்றான்; காமஞ் சாலா இளமை யோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. (தொல்.995) கைக்கிளையின் இலக்கணம் கூறும் இந்நூற்பா நீண்ட சிந்தனைக்கும் நினைவுக்கும் உரியதாதலின், முழுதும் தரப்பட்டது. அகத்திணையைச் சார்ந்த கைக்கிளைக்கு ஒரே ஒரு துறைதான் உண்டு.’புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே’ என்ற நடையால், இத்திணை விரிவற்றது, துறைபல இல்லாதது என்பது போதரும், நான்கு பாடல்களே இத்திணைக்குச் சங்கஇலக்கிய முழுதும் காணப்படுகின்றன. அந் நான்கும் கலித்தொகை ஒன்றிலேதான் உள (கலி.56,57,58,100).கபிலர் பாடியவை மூன்று; நல்லுருத்திரனார் பாடியது ஒன்று. பெருந்திணை ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே (தொல்.996) பெருந்திணை நான்கு துறைகள் கொண்டது;- 1. காதலியைப் பெறாத நிலையில், காதலன் மடலேறிச் செல்லுதல். 2. கட்டிளமைக் காலத்து இன்பம் துய்க்காது கணவன் நெடுங்காலம் பிரிந்திருத்தல். ____________________________________________________ |