இவ்வுலகம் உள் பொருளே; பெருகிய பொருள் நாகரிகம் வேண்டத்தக்கது”1 அறமும் வளமும் உடைய இவ்வுலக வாழ்வே வாழ்க்கை2 என்பது சங்கத் தமிழ் மன்பதை-சமுதாயம்-தெளிந்து கடைப்பிடித்த பெருநெறியாகும். “மன்னா உலகத்து (புறம். 165) என்ற தொடருக்கு நிலையா உலகம்-உலகம் நிலையாதது என்றல் கருத்தன்று. பொருள்கள் நிலையாத தோன்றியும் அழிந்தும் வரும் நிலையாத பொருள்கள் உடைய ஆனால் தான் நிலைத்த உலகம் என்பது கருத்து. நில்லாத கால், இல்லாத மனிதன் என்ற தொடர்களை ஒப்பு நோக்குக. உலகத்துப் பொருள்கள் நிலையா என்று உரை செய்யாமல், உலகமே நிலையாதது என்று உரைப்போமேல்’ நிலையா உலகத்து நிலைக்கும் புகழைத் தேடுக என்பதும் “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே” என்பதும் பொருந்துமா? உலகம் நிலையுடையது என்றும், உலகத்துப் பொருள்களுள் புகழ் நிலையுடையது என்றும் நம் முன்னோர் துணிந்தனர். “தொலையா நல்லிசை உலகமொடு நிற்ப’ (மலைபடு.70) “கொடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅலியரோ இவ்வுலக மோடுடனே” (பதிற். 14) “தாவில் நல்லிசை” (தொல். 1039), “நிலமிசை நீடுவாழ்வார்” (குறள். 3), “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்றில்” (குறள். 23) எனவரும் சான்றடிகள் பண்டையிலக்கியத்துப் பலப்பல, இத் தமிழியற்படியே, தொல்லைச் சமுதாயம் உருவாகி வளர்ந்தோங்கிற்று. பொருள் நாகரிகம் என்பது அறத்துக்குப் புறம்பான நாகரிகம் என்று ஆமோ? பெருவாரியர் தத்தம் கடமைகளை மனவுணர்வொடு ஆற்றும் ஓர் அமைதிச் சமுதாயத்திற்றானே முயற்சி பெருகும், பொருள் கொழிக்கும், ஈகை சுரக்கும், நெஞ்சம் விரியும். ஆதலின் புறநலம் சமுதாயத்தின் அகநலத்தைக் காட்டும் பளிங்கு. பிறப்புத் தந்த இவ்வுலகத்துப் பல்லாற்றானும் நன்கு வாழ்தல் வேண்டும் என்பது தமிழினக்குறிக்கோள். இவ்வுலக வாழ்வு என்பதற்காக அகங்கெட்டு அறங்கெட்டுப் போகவேண்டுமா? வேண்டுவதில்லை என்பது தமிழ்விடை. நல்ல அறத்தொடும் தூய அகத்தொடும் உலக வாழ்க்கையை நடத்தலாம், நடத்த வேண்டும். அகத்திணையாகுக, புறத்திணையாகுக, தமிழின் எத்துறைப் பாடலிலும் இவ் வாழ்வறம் இலங்கக் காண்பீர். பண்டைப் புலவர்களும் பாணர்களும் வாழ்ந்த பெற்றியை ஓர்க. கொடிய நல்குரவுப் பட்ட காலத்தும், தன்மானம் இழந்து இல்லாதனவெல்லாம் ஏற்றிப் புகழ்ந்து இரக்கும் கீழ்மை அவர்கள்பால் இல்லை: ____________________________________________________ புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்-பட்டினப்பாலை -217-8 புகழ்நிலைஇய மொழிவரை அறநிலைஇய அகனட்டில். 42-3 |