பக்கம் எண் :

103  வல்லிக்கண்ணன்

     “சுவரொட்டியாகவும் சீவனற்ற முதலையாகவும் அசட்டுத் தவிட்டு நிறம் பூண்டு,
சந்தடி செய்யாது தன் இரைமீது பதுங்கிப் பாய வரும் வீட்டுப் பல்லியை அறியாதவர்
யாருமில்லை.

     எச்சிலால் வலை பின்னி, அதன் நடுவே தன் எண்கால் பரப்பி வந்து சிக்கும் ஈக்கும்
பூச்சிக்கும் சலனமற்றிருக்கும் சிலந்தியை அறியாதவர் ஒருவருமில்லை.

     மண்டையெல்லாம் கண்ணாக, அழுகல் சிவப்பு முகமும், புழுவுடலும், சிறு இறகும்,
விஞ்ஞானம் ஆவிர்ப்பளித்த பேயாகவும், சுத்தா சுத்தமறியாத அபேதவாதியாகவும்
மொய்த்துச் சலிக்கும் ஈயென்ற வொன்றை அறியாதவருமில்லை.

     கூட்டமாக அணிவகுத்து, அசட்டுக் கடுஞ்சிவப்பு நிறந் தாங்கிச் சிந்திய ரௌத்திரத்
துளிகள் போல் தடுத்தோரைக் குதறித் தள்ளி அடுத்த நிமிஷம் சாவதற்கு விரையும் இக்
கட்டெறும்புக் கூட்டத்தையும் நாம் அறிவோம்.”

     இது கவிதை (புதுக் கவிதை) என்று சொல்வதானால், லா.ச. ராமாமிர்தம் எழுதியுள்ள
கதைகள் அத்தனையும் மணி மணியான கவிதைகளே என்று ‘சத்தியம் பண்ண’
வேண்டியதுதான்1

     துரைஸ்வாமியின் ‘காத்திருந்தேன்’ நல்ல கவிதை. ஒருவனது வருகை நோக்கிக்
காத்திருக்கும் ஒரு நபரின் தனிமையை, மன உளைச்சலை, உணர்ச்சி சுழிப்புகளை
விரிவாகச் சொல்லுகிறது இது.

     ‘திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க, ஒரு தரம் படிப்பவருக்கும் ஒரு வேகம், ஒரு
எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக் கொள்ளும் ஒரு குணம்
இருக்க வேண்டும் புதுக் கவிதையிலே’ என்று க.நா.சு. வகுத்துள்ள இலக்கணத்துக்கு ஏற்ப
இயற்றப்பட்டுள்ளது. ‘கொல்லிப் பாவை.’
 
  ‘திரௌபதி அவள்
வந்து போகும் அர்ச்சுனன் நான்’

     என்ற வரிகள் விளக்கம் கூறப்பெற்று, திரும்பத் திரும்ப ஒலிக்கின்றன இக்கவிதையில்,
‘பேதாபேதம்’ என்றொரு கவிதை. இது வேறு ரகமான சோதனை.
 
  மண்புழு
மண்ணைப்
பொன்னாக்கும்!

இலைப்
புழு
பட்டு நெய்யும்!

மனிதரில்
சிலந்தியும்
பெண்டிருட்
சிதலும்
உண்டு.