| தின்னும் கிருமி வெளிச்சச் சிறகில் மிதக்கும் குருவி | தரும சிவராமுவின் கவிதையாற்றலின் வளர்ச்சியைக் கூறும் படைப்புகள் இவை. விடிவு, மாலை, நிழல்கள், சைத்ரீகன், மறைவு ஆகியவை கற்பனை நயத்தையும் சிந்தனைச் செறிவையும் விளக்கும் கவிதைகள். ‘எழுத்து’வின் ‘மூன்று ஆண்டுகள்’ வளர்ச்சி குறித்து 36-வது இதழில் வந்துள்ள தலையங்கம் கவிதைகள் பற்றியும் பேசுகிறது-- ‘எழுத்து’வில் சுமார் 90 கவிதைகள் வந்திருக்கின்றன. எழுத்துவில் வெளியான கவிதைகள் பொருள் விளங்காத சொற்கள் பலவற்றால் பிணைத்துக் கட்டப்பட்ட கரடு முரடான கதம்ப மாலைகளாக உள்ளவை என்ற ஒருவாசகர் கருத்தை புதுக்கவிதை பற்றி ஓங்கியடித்துச் சொல்லும் பாதகமான ஒரு அபிப்பிராயத்தின் பிரதிநிதித்துவக் குரலாக கருதுகிறோம். இந்த இடத்தில் அதைப் பற்றி விவாதிக்க இடம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். இந்த மாதிரி கருத்துக்கள் கிணற்றுத் தவளை வாழ்வினால் ஏற்படுவது. இலக்கியச் சிறப்பான உலகத்து பல்வேறு மொழிகளிலும் தற்காலக் கவிதைநிலை எப்படி இருக்கிறது என்பதை உணர முடிந்தவர்கள்தான் இந்த புதுக்கவிதை வளர்ச்சியைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். அன்றைய பாரதியையே கவியாக இன்னும் உணரமுடியாத சூழ்நிலையில் இன்றைய புதுக்கவிதை சோதனைக்கார முதல்வன் பிச்சமூர்த்தியையும், எழுத்து மூலம் முளைவிட்டு வரும் இளம் கொழுந்துகளையும் புரிந்துகொள்ள, புதுக் கவிதைகளின் தன்மைகளை உணர கொஞ்சம் போகவேண்டும். எழுத்து மூன்று ஆண்டுகளாக, சலிக்கும்படி கேட்க ஏற்பட்ட இது போன்ற கருத்துக்களைக் கண்டு ஆத்திரப்படாது. இந்த கருத்து மாறச் செய்யும் முயற்சியாக வழிவகைகளை ஆராய்ந்து செல்வது மூலம்தான் பாரதிக்குப் பின் இந்த புதுக் கவிதை பிறப்பு காலகட்டத்தை செழிப்பாக்க முடியும்.” | | |
|
|