பக்கம் எண் :

111  வல்லிக்கண்ணன்

  பேயறைந்த நிலையில் வெறிக்க!’

இப்படி நயங்கள் பல கொண்டது ‘நரகம்’

‘தமிழகம் கீழுமல்ல
முழுவதும் மேலுமல்ல;
உலையேற்றி விட்டு
சோறாக்க மறியல்;
பட்டினியும் அழிவுமே
கிடைத்த பயன்;
பின்னாலும் போகவில்லை
முன்னாலும் நடக்கவில்லை;
நடுக்கிணற்றில் நிகழ்காலம்’


என்று நாட்டின் நிலையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது இதில்

     கே. அய்யப்ப பணிக்கர் கேரளத்தில் கவிதை உலகில் தனி இடம் பெற்றவர்.
அவருடைய படைப்புகளில் சிறந்ததான ‘குருக்ஷேத்திரம்’ எனும் நெடும் கவிதையை நகுலன்
மலையாளத்திலிருந்து தமிழாக்கினார். அது ‘எழுத்து’ 48-வது இதழில் வந்தது.

     1962-ன் பெரிய சாதனை பிச்சமூர்த்தி கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘எழுத்து
பிரசுரம்’ ஆகப் பிரசுரித்ததும், ‘புதுக் குரல்கள்’ தொகுப்பைத் தயாரித்து வெளியிட்டதும்
ஆகும்.

     ந.பி. 1938 முதல் 1962 முடிய எழுதிய கவிதைகளில், தேர்ந்தெடுத்த 35 கவிதைகள்
கொண்ட தொகுப்பு ‘காட்டு வாத்து’.

     அதன் முன்னுரையில்- ‘எதிர்நீச்சு’ என்ற தலைப்பில்-பிச்சமூர்த்தி எழுதியுள்ள
கருத்துக்கள் இவை-

     ‘இம் முயற்சி ஆற்றில் எதிர்நீச்சல் போடும் முயற்சி, பாதையில்லாக் காட்டில் பயணம்
செய்யும் முயற்சி. இம்மாதிரி கவிதையின் அமைப்பு முறையில் அனுபவத்தால் மாறுதல்
ஏற்பட்டுக் கொண்டே போகும். இலக்கண வரையறை என்று எதுவும் லேசில் அகப்பட்டு
விடாது என்பதும் எனக்குத் தெரிந்தது. இத்தொகுப்பிலும் அந்த மாறுதலைக் காணலாம்.
முடிவான முறையைக் கண்டு விட்டேன் என்று சொல்லமாட்டேன். மற்றபடி கவிதைகளின்
வெற்றி தோல்விகளைப் பற்றி முடிவு செய்ய வேண்டியது என் வேலையன்று.

     ஆனால் இரண்டொரு பொது விஷயங்களை மட்டும் கூறலாம். கவிதை கவிதையாக
இருந்திருக்கிறது. வரலாறாக இருந்திருக்கிறது. மதத்தின் குரலாக இருந்திருக்கிறது மனத்தின்
குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிட்டால்
சரியான அகத்துறை காணும் என்று தோன்றுகிறது. காதல் மட்டும் அகத்துறை என்று வகை
செய்வது மன இயல் சாத்திரத்திற்குப் பொருந்தாது. இத்தொகுப்பில் கதை போல்
இருப்பவற்றில் கூட, கதைச்சுவையைவிட தொனிச்சுவை ஓங்கி நிற்பதைக் காணலாம்.
எதிர்காலத்து நெடுங்கவிதை இந்தப் போக்கில் செல்லாமல் கதைச் சுவையை நம்பினால்
கவிதை அம்சம் குன்றிவிடும். கவிதை இனி நாவலுடனோ நாடகத்துடனோ போட்டியிட
முடியாது.