பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 114

பிறந்தவன் தான் என்றாலும் அதுக்கும் மீறி எழுத்து அடிப்படைகளை பேருண்மைகளை,
வ.வே.சு. அய்யர் குறிப்பிட்டிருப்பது போல அகண்டப் பொருளின் சாயைகளை,
காட்டுபவனாக என்றைக்குமாக நிற்பவன். இருந்தாலும் ஒரு காலத்துக் கவி இதயம் பற்றிக்
கொண்ட அம்சங்களை அடுத்த கால கவி இதயம் வாங்கிக் கொள்கிறதில்லை;
முடிகிறதில்லை. மதிப்பு என்று சொல்கிறோமே அது தலைமுறைக்குத் தலைமுறை
வித்தியாசப்படுகிறது. அடிப்படை மாறாமல், மேல் மாற்றங்களாக, முகச்சாயல் மாறுதல்களாக
ஏற்பட்டு வருவது தெரிந்தது. அபூர்வமாக அடிப்படையைத் தொட்டாலும் அடிப்படை
வெள்ளத்துக்கு முன் நாணலாக வளைந்து கொடுத்து நிமிர்ந்து விடுகிறது. இந்த முகச்சாயல்
மாறுதல்களில் உலுக்கல்கள் எந்த நாட்டு இலக்கியத்திலும் ஏற்படாமல் இல்லை. கிளாஸிஸம்,
ரொமாண்டிஸிஸம், ரியலிஸம் இப்படி கவியின் மனப்பாங்கிலே, உள்ளடக்கத்திலே அனுபவ
வெளியீட்டிலே மாறி வந்திருக்கின்றன.

     இந்த மாறுதல்களில் ஒன்றாக, 1910க்குமேல் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள
கவிகள் சிலர் சேர்ந்து, கவிதைப் புனருத்தாரணத்தை குறிக்கோளாகக் கொண்டு
இமேஜிஸ்ட்கள் என்ற கோஷ்டி உருவாகியது. பிரெஞ்சு இலக்கியத்தைப் பின்பற்றி வெர்ஸ்
லிப்ரெ என்ற சுயேச்சா கவிதை முறையின் சாத்தியங்களை ஆராய்வதில் அக்கறை
காட்டினார்கள். சொல் சிக்கனம், சகஜத்தன்மை, பேச்சு அமைதி, செம்மை, நூதன படிமப்
பிரயோகம் ஆகிய தன்மைகளைக் கவனித்து கவிதைகளை அமைக்கலானார்கள்,
டி.இ. ஹு ம், எஸ்ரா பவுண்ட், டி.எஸ். எலியட் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் புதிய
தொனியும் நூதன நடையும் நவீன படிமப் பிரயோகமும் அவைகளில் தெரிந்தன.
விஞ்ஞான, இதர தொழில்துறை தகவல்களை உள்ளடக்கிய குறியீடுகள், பயனாகும் சொற்கள்
பொருத்தப்பட்டு ஒரு புதிய பாணியே தோன்றியது.

     ஒரு வரிக்கு இத்தனை சீர் இருந்தால் இந்த ரக கவிதை என்று, ஒரு வரியின் நீளம்
சம்பந்தமாக ஏற்கெனவே வலிந்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வரையறுப்பை விட ஒரு நிறுத்து
பேச்சு அல்லது சிந்தனைப் போக்கு அளவைக் கொண்டு சுதாவான வரையறுப்பினால்
நிர்ணயிக்கப்படும் ஒரு வரி நீளம் மேல் என்று ஃபிரெஞ்சு சுயேச்சா கவிதை
சோதனைக்காரர்கள் கூறியது இவர்களைப் பாதித்தது. அதே சமயம் ஒவ்வொரு வரியும்
அடிநாதமாக இடையறாத ஒலிநயம் (ரிதுமிக் கான்ஸ்டென்ட்) கொண்டிருக்க வேண்டும்
என்று அவர்கள் வற்புறுத்தினதையும் மனதில் போட்டுக் கொண்டார்கள். ஒரே தொகை
அசை, சீர்களைப் பயன்படுத்துகிறபோது, திரும்பத் திரும்ப ஒரே விதமான ஓசை நய
சப்தம் தான் விளைகிறது. மரபான கவிதை இந்த விதமான ஒரு இடையறாத ஓசை
நயத்தாலேயே முழுக்க முழுக்க ஆனது. ஆனால் சுயேச்சா கவிதையோ தன்
உள்ளடக்கத்துக்கும் பேச்சுக் குரலின் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு ஏற்பட்ட தேவைக்கு
ஏற்ப வேறுபடும் ஒரு ஓசை நயத்தை முதன்மையாகக் கொண்டிருக்கும் என்பது அவர்கள்
கருத்து. இந்த இடையறாத ஒலிநயத்தோடு அவர்கள் ஒன்றிப்பையும், பாட்டர்ன்
என்கிறோமே- ஒருவித ‘தினிசு’ அதையும்