பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 14

   

இரட்டையர்

 
     பாரதி தோற்றுவித்த வசனகவிதை முயற்சி பின்னர் 1930களின் பிற்பகுதியில்தான்
துளிர்விடத் தொடங்கியது. பாரதிக்குப் பிறகு புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத்துடன் முதன்
முதலாக ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்திதான்.
 
     சிறுகதைத் துறையில் குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றிருந்த ந.பி., ‘பிக்ஷு’ என்ற
பெயரில் கவிதைகள் எழுதலானார். அவர் எழுதிய முதல் கவிதை எது, அது எந்தப்
பத்திரிகையில் பிரசுரமாயிற்று என்பது இப்போது தெரியவில்லை.
 
     (‘நான் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தது 1934 ‘மணிக்கொடி’யில்; ‘காதல்’ முதல்
கவிதை. தொடர்ந்து ‘ஒளியின் அழைப்பு’, ‘கிளிக்குஞ்சு’, ‘பிரார்த்தனை’, ‘தீக்குளி’
முதலியவை 1934-ம் வருஷ ‘மணிக்கொடி’ யிலேயே பிரசுரமாயின. 1934 முதல் நான்
புதுக்கவிதை தொடர்ந்து எழுதியிருக்கிறேன்’ என்று ந.பி. ஒரு கடிதம் மூலம் பின்னர்
அறிவித்தார்.)
 
     நான் முதன் முதலாகப் பார்க்க நேர்ந்த பிக்ஷுவின் கவிதை ‘கிளிக்கூண்டு’, 1937-ம்
வருடம் ‘பிரசுரமான அருமையான இலக்கிய மலரான ‘தினமணி’ ஆண்டு மலரில் (புதுமைப்
பித்தன் பொறுப்பில் தயாரானது அது) வெளிவந்தது.
 
  “இருளின் மடல்கள் குவிந்தன,
வானத்து ஜவந்திகள் மின்னின.
காவிரி நாணல்கள் காற்றில் மயங்கின,
மேற்கே சுடலையின் ஓயாத மூச்சு,
காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும் காட்சி,
கிழக்கே பெண்களின் மட்டற்ற பேச்சு,
கட்டற்ற சிரிப்பு
காவிரி மணலில் குழந்தைகள் கொம்மாளம்...”
 
 
     இப்படி இனிமையாக ஆரம்பிக்கும் அழகான வசனகவிதை அது. (‘கிளிக்கூண்டு’
என்ற இக்கவிதை, 1962-ல் சி.சு. செல்லப்பா தயாரித்த எழுத்துப் பிரசுரம் ‘புதுக்குரல்கள்’
1964-ல் வெளியிட்ட ந. பிச்சமூர்த்தியின் ‘வழித்துணை’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலும்
இடம் பெற்றுள்ளது. பின்னர் பிரசுரம் பெற்ற ‘பிச்சமூர்த்தி கவிதைகள்’ என்ற தொகுப்பிலும்
உள்ளது.)
 
     “சம்பிரதாயமான யாப்பு முறைகளுக்கு உட்படாமல் கவிதையைக் காணும் புதுக்கவிதை
முயற்சிக்கு, யாப்பு மரபே கண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன்
எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதைத் தொகுப்புத்தான் வித்திட்டது. அதைப்
படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத் தெரிந்தது. பின்னர் பாரதியின்