பக்கம் எண் :

15  வல்லிக்கண்ணன்

‘வசனகவிதை’யைப் படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக
என் உணர்ச்சிப் போக்கில் இக்கவிதைகளை எழுதினேன்” என்று ந.பி. கூறுகிறார்.
 
     வசனகவிதை ரீதியில் கவிதை எழுதுகிறபோதே, மரபு வழிக்கவிதை போல் தோற்றம்
காட்டுகிற, ஓசை நயமும் செவிநுகர் செஞ்சொல் ஓட்டமும் நிறைந்த கவிதை இயற்றுவதிலும்
பிக்ஷு நாட்டம் கொண்டிருந்தார். 1937 இறுதியில் ‘மணிக்கொடி’யில் பிரசுரமான ‘அக்கா
குருவி’ இதற்கு நல்ல உதாரணம் ஆகும். ‘வசனகாவியம்’ என்றுதான் அது அச்சாயிற்று.
 
  “சித்திரைச் சூரியன் செஞ்சூலம் பாய்ச்சலால்
ஆற்றுமணல் வெள்ளம் அனலாகக் காய்ந்தது;
பத்தரை மாற்றுச் சொர்ணப்பொடி போல்ரவி
ஏற்ற மணல்காடு அங்கங்கு மின்னிற்று.
செழிப்புற்ற தோட்டமும் பாவீனும் ஏற்றமும்,
பேணாது பொங்கிய கவிஞன் கனவைப் போல்
எழில் மண்டித் தூங்கும் விரிசடை மரங்களும்
நாணாத பச்சைக்கை நீண்டு பரவல்போல
வானப் பகைப்புல சித்திர மூங்கிலும்
மொக்கின் வரிசையும் மலர்களின் சூழ்ச்சியும்
கானமே உயிர்மூச்சாய்க் கொள்ளும் பறவையும்
கொக்கின் வர்ணங்கொள் கரையோர நாணலும்...”
 
 
     இவ்வாறு மேலே மேலே வளர்கிறது கவிதை. ‘துன்பத்தில் அக்காவுக்கென்றென்றும்
ஏங்கும்’ ஒற்றைக் குயிலின் சோகத்துடன் முடிகிறது.
 
     கொம்பும் கிணறும், மார்கழிப் பெருமை, பொற்றாமரை போன்ற வசன கவிதைகளை
ந.பி. 1939-ல் எழுதினார். அவை மணிக்கொடி, ஜெயபாரதி முதலிய பத்திரிகைகளில்
அவ்வப்போது பிரசுரமாயின.
 
     அதே காலகட்டத்தில்தான் கு.ப. ராஜகோபாலனும் கவிதை முயற்சியில் ஈடுபட்டார்.
அவரும் சிறுகதையில் சாதனைகள் புரிந்தவர்தான்.
 
     கு.ப.ரா. வின் வசனகவிதைகள் பிக்ஷுவின் கவிதைகளினின்று தொனியிலும், சொல்லும்
பொருளிலும் மாறுபட்டிருந்தன.
 

ஏர் புதிதா?

 
முதல் மழை விழுந்ததும்
மேல் மண் பதமாகி விட்டது.
வெள்ளி முளைத்திடுது, விரைந்து போ, நண்பா!
காளைகளை ஓட்டிக் கடுகிச் செல், முன்பு!
பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு,
மாட்டைப் பூட்டி
காட்டைக் கீறுவோம்!
ஏர் புதிதன்று, ஏரும் நுகத்தடி, கண்டது,