பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 142

சி. மணி

    
     புதுக்கவிதை வரலாற்றில் சி. மணிக்கு தனியான ஒரு இடம் உண்டு.

     1962ல் ‘நரகம்’ என்ற நெடுங்கவிதையை உருவாக்கி, தனது படைப்பாற்றலையும்,
சொல்லாட்சியையும், பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டையும், புதுமை வேட்கையையும்,
கற்பனைவளத்தையும், வாழ்க்கைச் சுற்றுப் புறத்தைக் கூர்ந்து நோக்கி அழுத்தமான
முடிவுகளுக்கு வருகின்ற மனப் பக்குவத்தையும் நிரூபித்துக் காட்டிய சி.மணி மேலும்
மேலும் பல புதுமைகளையும் சோதனைகளையும் வெற்றிகரமான சாதனைகளாக
ஆக்கியிருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒரு சிலவற்றை அவ்வப்போது நான்
குறிப்பிட்டுமிருக்கிறேன்.

     1965ல் இவர் ‘வரும் போகும்’ என்ற நெடுங்கவிதையையும் 1966ல் ‘பச்சையம்’ எனும்
நீண்ட கவிதையையும் படைத்துள்ளார்.

     இவை போக சிறுசிறு கவிதைகளாக அநேகம் எழுதியிருக்கிறார். கற்பனை வளம்,
கருத்து நயம், வளமான சொல்லாட்சி, புதுமைப் பார்வை முதலியன சின்னஞ்சிறு
கவிதைகளிலும் காணக்கிடக்கின்றன. லேசான பரிகாசமும் சில கவிதைகளில் தொனிக்கிறது.

     நிலவைப் பற்றி இவர் எழுதிய கவிதை ஒன்றை முன்பு குறிப்பிட்டேன்.
‘நிலவுப்பெண்’ என்ற இவர் இன்னொரு கவிதையும் எழுதியுள்ளார்.
 
  ஊடாத பெண்ணொருத்தி உண்டென்றால்,
ஊடிப் புலந்து வெண்முகம் திரும்பி
கருங்குழல் புரளும் புறம் காட்டாது
கலைமுகக் காட்சி தந்தே கூடல்
தீ வளர்க்கும் பெண்ணொருத்தி உண்டென்றால்
நீயல்லவோ அப்பெண்!
 

(எழுத்து-76)

     இன்றைய பாரியையும் அவனுடைய ஈகைத் திறத்தையும் நயமாக அறிமுகம் செய்கிறது
ஒரு கவிதை.
 

ஈகை

  பட்டமரம் போலச் சாய்ந்த சாலை
இருபுறத்திலும் நடைபாதை
நெடுகிலும் மனிதர்
மறைந்து வாழ
பயன்படும் வளைகள்
ஒன்றில் சாக்குத்திரை;
அதில் நீளும் கிழிசல்
வழியே அசைந்த--