பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 154

மாணிக்கவாசகம், எழில்முதல்வன், இரா. மீனாட்சி முதலியோர் உற்சாகமாக எழுதிக்
கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆற்றலைக் காட்டும் தரமான படைப்புகளாகவே
அவை அமைந்திருந்தன.

     நா. காமராசனின் ‘புல்’ எழுத்து மே-ஜூன் இதழில் (101-102) வெளிவந்தது.
 
  வால் முளைத்த மண்ணே
வசந்தத்தின் பச்சை முத்திரையே
உடல் மெலிந்த தாவரமே
உன்னை பனித்துளிகளின் படுக்கையறை என்பேன்.
நஞ்சைத் தண்ணீரில் நனைந்து வளர்ந்து
நாள் தோறும் அறுவடையாகும் நாட்டியப் புல்லே
பால் தரும் கால்நடைகளின் தின்பண்டமே
பச்சை நிறத்தின் விளம்பரமே
குசேலரின் உணவுக் களஞ்சியமே
குதித்தாடும் கடல் நீரைக் காதலிக்காமல்
உப்புருசி பெற்று விட்ட
ஓவியப்புல்லே!
 
     மாதம் தோறும் வெளிவந்த ‘எழுத்து’ அதன் ஒன்பதாம் ஆண்டின் பிற்பகுதியில் (மே
-ஜூன் முதல் ) இரண்டு மாதங்களுக்கு ஒரு இதழ் என்ற முறையில் தான் பிரசுரம் பெற
முடிந்தது, அதன் பத்தாம் ஆண்டில், முதல் மூன்று மாதங்கள் மாசிகையாக வந்தபின்,
ஏப்ரல் முதல் அது ‘காலாண்டு ஏடு’ ஆக மாறிவிட்டது.

     காலாண்டு ஏடு ஆக ‘எழுத்து’ புதுக்கவிதைக்குச் செய்த பணியை தனியாக
ஆராயவேண்டும்.