பக்கம் எண் :

165  வல்லிக்கண்ணன்

      கவிஞர், புதுக்கவிஞர் என்னும் இருவகையினரும் உருவம். உள்ளடக்கம் என்னும்
இரண்டிலும் சமமான கவனம் செலுத்துவதில்லை. கவிஞரின் கவனம் உருவத்தைச் சார்கிறது.
புதுக்கவிஞரின் கவனம் உள்ளடக்கத்தைச் சார்கிறது. கவிஞரின் கவனம் உள்ளடக்கத்தையும்
நோக்கிச் செல்லாத காரணத்தால், உள்ளடக்கத்திலும் புதுமையும் இறுக்கமும் இல்லாமல்
வறட்சியே தெரிகிறது. புதுக்கவிஞரின் கவனம் உருவத்தையும் நோக்கிச் செல்லாத
காரணத்தால், உருவத்தில் கட்டுக்கோப்பு இல்லாமல் தளர்ச்சியே தெரிகிறது. இக்குறைகளை
நீக்குவதற்குக் கவிஞரும் புதுக்கவிஞரும் உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் சமமான
கவனம் செலுத்தவேண்டும். உருவத்தைக் கவனிக்கிற அளவு உள்ளடக்கத்தையும் கவிஞர் கவனிக்க வேண்டும். உள்ளடக்கத்தை கவனிக்கிற அளவு உருவத்தையும் புதுக்கவிஞர் கவனிக்கவேண்டும்.” என்று ‘யாப்பி’ல் செல்வம் வலியுறுத்தியிருக்கிறார். இது படைப்பாளிகள் நினைவில் நிறுத்திக் கொள்ளத் தகுந்த கருத்து ஆகும்.

     ‘நடை’யில் பிரசுரிக்கப்பட்டுள்ள கவிதைகளில் பெரும்பான்மை யானவை உள்ளடக்கப்
புதுமையோடு, உருவ அமைதியும் பெற்றிருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு படைக்கப் பட்டவை என்றே தோன்றுகின்றன.

     சி.மணி (செல்வம்), வே. மாலி என்ற பெயரில் கவிதைகள் படைத்தபோது,
புதுமையான உள்ளடக்கத்தைக் கையாளும் வேளையில், கவிதையின் பொருளுக்கு ஏற்றபடி
உருவமும் அமையவேண்டும் என்ற சிரத்தையும் காட்டியிருக்கிறார்.
 
  காதல் காதல் என்ப, காதல்
வெறியும் நோயும் அன்றே, நினைப்பின்,
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்,
காதல் கவிந்த வாழ்வில்
வானம் தந்த வாம நிலவாம்.
                                (காதல் - சி. மணி, நடை-1)
நீரியல் பூஞ்சை தளும்பியாலக்
கெஞ்சிடும் மென்நடை பயின்ற பாவை
வீதியில் இட்டது தளும்பு நடை,
நெஞ்சினில் இட்டதோ தழும்பு நடை
                                       (சி. மணி, நடை-2)
சனித்து விட்டது
மினி யுகம்; ஒழிந்தது
நனி பெரும் மனிதர் கொற்றம்
இனி
மினி மக்கள் காலம்
மனி தனை விட்டு
மினி தனைப் பாடு போற்று
குனி என் பேச்சைக் கேள் ஏ