பக்கம் எண் :

167  வல்லிக்கண்ணன்

  புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்;
பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும்...
 
என்று தொடங்கி வளரும் ‘பரிசில் வாழ்க்கை’ பேச்சாளர் தன்மையையும், அவர்கள்
வாழ்ந்து வளர்வதற்கு வகைசெய்யும் நாட்டுமக்களின் இயல்பையும் சுவையாகச்
சித்திரிக்கிறது.

     பிரசங்கிகளின் வாய்ச்சவடாலை கிண்டல் செய்யும் வகையில் ஞானக்கூத்தன் பல
கவிதைகள் எழுதியுள்ளார். அப்படிப் பட்டது தான் ‘நடை’4ல் வந்த ‘ஆவதும்
என்னாலேயும்’.
 
  முதலிலிவர் போட்டியிட்டார் ஜாமின் போச்சு,
மறுபடியும் இவர் நின்றார் எவனெல்லாமோ
உதவுவதாய் வாக்களித்துக் கை விரிச்சான்.
கடைசி நாள், நான் போனேன். சுவரிலென்பேர்
கண்டதனால் முன் கூட்டி மக்கள் வெள்ளம்.
கைதட்டல் நானெழுந்து பேசும் போது,
ரெண்டு மணி, எதிரிகளைப் பிட்டு வைச்சேன்.
பத்தாயிரம் வாக்கதிகம். இவர் ஜெயிச்சார்.
 
     சாவு கொடுத்த வேள்வித்தாள்; தீர்வு, கீழ்வெண்மணி, நாய். செத்தபன்றி, தணல்,
வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு. கொள்ளிடத்து முதலைகள், படிமத் தொல்லை ஆகிய
ஞானக்கூத்தன் கவிதைகள்’நடை’யில் வந்தவை தான்.

     பேச்சில் அடிபடுகிற சாதாரண வழக்குச் சொற்களைக் கோத்து உயிரும் உணர்ச்சியும்
வேகமும் உள்ள கவிதைகளைப் படைத்து விடும் திறமை ஞானக்கூத்தனுக்கு இருக்கிறது.
இதை ‘நடை’யில் வந்த கவிதைகள் எடுத்துக் காட்டின. பரிகாசத்தொனி அவர் கவிதைக்குத்
தனித்தன்மை சோர்க்கிறது.
 
  பாகிஸ்தானி சொல்றானாம்
பயந்தாங் கொளியாம் நாமெல்லாம்
சீனாக்காரன் சொல்றானாம்
சண்டை நமக்குத் தெரியாதாம்
இலங்கைக்காரன் சொல்றானாம்
எழுத நமக்கு வராதாம்
எடுப்பார் கையில் பிள்ளையென்று
ருசியாக்காரன் சொல்றானாம்,
பேச்சு நமக்குக் கைவருமே
அதை
எந்தப் பயலும் சொன்னானா?
குன்னி கிருஷ்ணன் சாட்டர்ஜி
கொண்டித் தோப்புக் குமரேசன்
இவர்கள் போலப் பிறநாட்டில்
ஒருத்தன் உண்டா சொற்பொழிய?
அது போகட்டும் கதக்களிகள்,
கும்மி, கரகம், கோலாட்டம்