பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 178

     எழுத்து ஏடுகளில் கவிதை எழுதியவர்கள் பலரும் தத்தமக்கெனத் தனியான
வாழ்க்கைப் பார்வையும், மதிப்புகளும், தத்துவ நோக்கும் கொண்டவர்கள். தங்கள்
கருத்துக்களைக் கவிதையாக்குவதற்குத் தனித்தனி உத்திகளைக் கையாளும் முயற்சியிலும்
அவர்கள் ஆர்வம் காட்டியுள்ளார்கள் என்பதை எழுத்து காலக் கவிதைகள்
எடுத்துக்காட்டுகின்றன.

     கவிதை மனநெகிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டது என்பதைக்
கருத்தில் கொண்டு அவர்கள் கவிதை படைத்திருக்கிறார்கள். ‘எண்ணத்துக்கு உருவாகாமல்
பிரக்ஞை நிலையிலேயே இருக்கும் அக உளைச்சல்களையும் வாழ்க்கையும் சூழ்நிலையும்
காலமும் தம்முள் சேர்க்கிற மனப்பதிவுகளையும் ஒரு கட்டுக்கடங்காத மனப்போக்கையும்
எழுத்தில் வெளியிட அநேகர் ஆசைப்பட்டுள்ளனர் என்பதையும் எழுத்து காலக்
கவிதைகள் விளக்குகின்றன.

     எழுத்து காலப் புதுக்கவிதைகளில் பெரும்பாலும் வெறுமை, மனமுறிவு, விரக்தி,
நம்பிக்கை ஊட்டாத தன்மை போன்ற குரல்களே ஒலிக்கின்றன என்று பொதுவாகக் குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.

     வாழ்க்கையின் போக்கும், சூழ்நிலை பாதிப்புகளும் நாட்டின் நிலைமையும் தனி
மனிதர்களிடையே வேதனையை, விரக்தியை ஏமாற்றத்தை, ஏக்கத்தை, ஏலாக்கோபத்தை,
நம்பிக்கை வறட்சியைத்தான் விதைத்து வளர்க்கின்றன.

     சுதந்திரம் வந்துவிட்ட பிறகு, சுதந்திர நாட்டிலே, ஃப்ரஸ்ட்ரேஷனுக்கு (மனமுறிவுக்கு)
இடமே இல்லை என்று கூட ஒரு விமர்சகர் கூறியுள்ளார். ஆனால் உண்மையில், சுதந்திரம்
பெற்ற பின்னர்தான் - நாட்டின் வளத்துக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் என்று பெரிய பெரிய
திட்டங்கள் தீட்டி ஏதேதோ சாதிக்கப் பட்டுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்திருக்கிற
கால கட்டத்திலேதான் நாட்டு மக்களிடையே வறுமையும் வெறுமையும், ஏமாற்றமும்
ஏக்கமும், வெறுப்பும் விரக்தியும், மனமுறிவும் கையாலாகாக் கோபமும் வளர்ந்து
பெருகுவதற்கான சூழ்நிலையும் கனத்துக் கொழுத்துள்ளது.

     இவற்றிடையே அல்லறபடும் தனி மனிதர்கள், இந்நிலைமைகள் தங்கள் மனதுக்குள்
கொண்டு சேர்க்கும் உணர்ச்சிப் பதிவுகளையும் கருத்துச் சுழிப்புகளையும்
கவிதைகளாக்குவது இயல்பே. இலக்கியம் என்பதே தனிமனித அனுபவ உணர்ச்சிகளின்,
எண்ணங்களின் வெளிப்பாடு தானே!

     இந்த வகையில், எழுத்து காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்கள் சரியான இலக்கிய
உணர்வுடனேயே படைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றே சொல்வேன்.

     அவர்களுடைய வாழ்க்கைப் பார்வையும் மதிப்புகளும், தத்துவ நோக்கும்
 கோளாறானவை- குறைபாடுகள் உடையவை, மனித குலத்துக்கு நலம் பயக்க முடியாதவை
என்று வேறு நோக்கும் போக்கும் தத்துவ ஈடுபாடுகளும் கொண்டவர்கள் சொல்லலாம்...
சொல்கிறார்கள்.

     இலக்கியத்தில் பல்வேறு நோக்குகளுக்கும் போக்குகளுக்கும் நம்பிக்கைளுக்கும்
-நம்பிக்கை வறட்சிகளுக்கும் கூட- இடம் உண்டு.