பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 182

     அப்படியிருந்தும், காட்டு வாத்து சைபீரியாவை விட்டு வேடன் தாங்கல் வந்து, ஏரி
நடு மரத்தில் கூடுகட்டி வாழ்ந்து, முட்டை இட்டு குஞ்சு பொரித்து வளர்கிறது.
 
  உயிரின் இயக்கத்தை
விண்டு வைக்கும் காவியத்தைக்
கண்ட பின்னும் உன்வழியைக் காணாயோ ?
பாடம் கேட்காமல்
பாதை காட்டாமல்,
குஞ்சுகளும் தாமாய்
சைபீரியா செல்லும்
இயல்புணர்வைக் கண்டபின்னும்
ஒளியைக் காணாயோ ?
 
என்று கவி கேட்கிறார்.

     ‘உயிரின் பெருமியக்கில் ஒளிந்தசையும் உள்விசையை, சிந்தனையே அறியாத சிவந்த
ரத்தம், உடலென்னும் ஒன்றைச் செய்யும் விந்தை விஞ்ஞானத்தை.
 
  உணர்ந்து வணங்கி
காட்டு வாத்தாகி
சிறகை விரி
வாழ்வும் வேடன் தாங்கலாகும்
 
என்று அறிவுறுத்துகிறது ‘காட்டுவாத்து’.

     வாழ்க்கைக்கு வழிகாட்டும் தத்துவம் என்ற தன்மையில் இதில் புதுமை ஒன்றும்
இல்லை. பறவைகள் ‘நாளை’ பற்றிக் கவலைப் படுவதில்லை. அடுத்தவேளை உணவைச்
சேர்த்து வைப்பதுமில்லை. இயற்கை வாழ்வு வாழ்கின்றன. அவ்வாறே மனிதர்களும்
வாழக்கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஞானிகள் எல்லாக் காலங்களிலும் கூறிவருகிற
தத்துவம் தான் இது. கவி பாரதியார் கூட ‘விட்டு விடுதலையாகி நிற்கும் சின்னஞ்சிறு
சிட்டுக் குருவியைப்போல’ மனிதனும் வாழ்ந்து இன்புற வேண்டும் என்று
வலியுறுத்தியிருக்கிறார்.

     பிச்சமூர்த்தி பழைய தத்துவத்தை அழுத்தமாகச் சுட்டிக் காட்ட, வேடன்
தாங்கலையும் காட்டு வாத்தையும் உவமையாகக் கொண்டிருக்கிறார். இது புதுமை.

     பல கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் பொறுக்கி எடுத்து இசைய வைக்கும்
முயற்சி தான் புதுக்கவிதை என்ற அவரது கூற்றுக்கு ஏற்ப, போர்க்கொடி, சுயநலம்,
பொதுச்சேவை, கலாசாரம், சரித்திரம், காலவெள்ள இயல்பு முதலியன பற்றிய சிந்தனைக்
கருத்துக்களை, இயற்கை காட்டும் தத்துவத்துக்கு இணையப் பொருத்தி, கவி தமது
எண்ணங்களைக் கவிதையோட்டமாக்கியிருப்பது ரசனைக்கு விருந்தாகிறது.

     ‘உடலென்னும் ஒன்றைச் செய்யும் விந்தை விஞ்ஞானம்’ அவ் உடலிலேயே பல மர்ம
ஆற்றல்களையும் சேர்ந்திருக்கிறது. ‘இயந்திரத்தைச் செய்த கடவுள்’ அதற்கான பட்டறையும்
அதிலே