பக்கம் எண் :

191  வல்லிக்கண்ணன்

     எழுதியுள்ள கருத்துரையை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்
என்று எண்ணுகிறேன். இலங்கை முற்போக்கு இலக்கிய மாசிகை ‘மல்லிகை’ 1973 ஆண்டு
மலரில் அவர் எழுதிய ‘புதுக் கவிதை’ - அதன் தோற்றம், நிலைப்பாடு பற்றிய ஒரு குறிப்பு
என்ற கட்டுரையின் கடைசிப் பகுதி இது.

     “அச்சுயந்திர நாகரிகத்தின் வளர்ச்சி நியதிகள் புதுக் ‘கவிதையின் தோற்றம்
வளர்ச்சியைத் தவிர்க்க முடியாதவையாக்கின. ஆனால் இவ்வளர்ச்சி அத்தகைய நாகரிக
வளர்ச்சியினைப் பூரணமாக அனுபவித்த சமூகங்கள் பண்பாடுகளுக்கே உரியதாகும்.

     கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரையில், சிறப்பாக இந்தியாவினைப் பொறுத்த
மட்டில் மேற்கூறியன மேனாட்டுத் தாக்கங்கள் என்ற முறையிலேயே முதன் முதலில்
வந்தடைந்தன. நாவல் என்னும் இலக்கிய வகை தோன்றுவதற்கான சமூகச் சூழ்நிலை
தோன்றுவதற்கு முன்னரே நாவல் என்ற இலக்கிய வகை இந்திய மண்ணை வந்தடைந்தது
போன்று, இன்று புதுக்கவிதை என்னும் இலக்கிய வடிவமும் வந்து சேர்ந்துள்ளது.
புதுக்கவிதை தோன்றுவதற்கான சமூகப் பின்னணி இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில்
தோன்றியுள்ளதா என்று பார்ப்போம்.

     தமிழ் நாட்டில் எழுத்தறிவு வீதம் என்னவென்பது எனக்குத் திட்டவட்டமாகத்
தெரியாது. ஆனால் அது அறுபது வீதத்துக்கு மேல் இருக்குமோ வென ஐயுறுகின்றேன்;
அப்படிக் கொண்டாலும் முப்பத்தைந்து நாற்பது விகிதத்தினர் தானும் கட்புல நாகரிக
நிலைக்கு இன்னும் வரவில்லையென்றே கொள்ள வேண்டும். மேலும், இயந்திரப் புரட்சியோ
கைத்தொழிற் புரட்சியோ தமிழ் நாட்டின் பாரம்பரியச் சமூக பொருளாதார அமைப்புக்களை
முற்றிலும் மாற்றிப் புதிய ஒரு யந்திரமயமான நாகரிகத்தை ஏற்படுத்தவில்லை என்பதும்
உறுதி. இயந்திரமய நாகரிகத்தின் ஒரு முக்கிய அம்சமான நகர நாகரிக வளர்ச்சி
சென்னையைத் தவிர (கோயம்புத்தூரும் உட்படலாம்) மற்றைய தமிழ் நாட்டுப்
பேரூர்களைப் பெரிதும் தாக்கியிருப்பதாகக் கூற முடியாது. அங்குள்ள முதலாளித்துவ
வளர்ச்சி நிலவுடைமையை, அன்றேல், நிலவுடைமையுறவுகளைப் பயன்படுத்தும்
நிலையிலேயே இன்றும் உள்ளது.

     மேற்கூறிய நிலைமையைப் பொதுப் பண்பாக எடுத்துக் கூறினாலும் இதனுள் ஒரு
சிறிய புறநடைத் தன்மையை நாம் அவதானிக்கலாம். அதுதான் சென்னையின் நகர நாகரிக
வளர்ச்சியாகும். நகர வளர்ச்சியின் (அர்பனைசேஷன்) தவிர்க்க முடியாத அம்சங்களான
தனி மனிதப் பராதீனம். விற்பனை நுகர்வாளர் உறவு முதலியன சென்னை நகர வட்டத்துள்
காணப்படுவது உண்மையே. மேலும் சென்னை நகர நிலையில் மேனிலையடைந்த மக்களும்,
அவர்கள் வழியை நகர வாழ்க்கை அளிக்கும் வாய்ப்பினால் பின்பற்றக் கூடியவர்களும்
பம்பாய், தில்லி, கல்கத்தா முதலிய நகரங்களுக்குச் சென்று அங்கும் நகர வாசிகளாகவே
வாழுகின்ற தன்மையினைக் காணலாம். அத்தகைய சமூகத்தினரும் பிற நகரவாசிகளும்
பாரம்பரியத்திலிருந்து பாரதீனப்படுத்தப் பட்டவர்களாகவே வாழ வேண்டிய நிலை
ஏற்படுகின்றது. அண்மைக்