பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 194

    ‘மகாத்மாவை நோக்கி ஒரு சமூகஜீவியின் கேள்வி’, இனிமேல் கிழக்கு எளிதிலே
சிவக்கும், இங்கே இடிமுழக்கம் கேட்கிறது’ போன்ற கவிதைத் தலைப்புகள் சில
உதாரணங்கள் ஆகும்.

     ஒரு சிலர் ரத்தம், பிரவாகம், ரத்த ஓட்டம், செங்குருதி வெள்ளம் என்று
முழக்கமிடுவதில் ஒரு வெறிவேக உவகை பெறுகிறார்கள் என்று தோன்றுகிறது.

     ‘தாமரை’ கவிதைகளில், நவபாரதியின் ‘இங்கே இடி முழக்கம் கேட்கிறது’.
பரிணாமனின் ‘அகப்பை நோய்கள்’ நாங்கள் அந்தரசாரிகள்’, விடிவெள்ளியின் ‘கடப்பை
காந்தம்மா’ திருநாவுக்கரசின் ‘ஓர் அருவியின் மரணம்’ இங்குமொரு பூ மலரும்’, பிரபஞ்ச
கவியின் ‘ஒரு மாணவனின் மரண விழாவின் போது’, சிற்பியின் ‘சிகரங்கள் பொடியாகும்!’
கோ. ராஜாராமின் ‘ஒப்புதல்’, ‘பாடங்கள்’ ‘தலைமுறைகள்’ ஆகியவை குறிப்பிடத்
தகுந்தவை.

     கோ. ராஜாராம் கவிதைக்கு விஷயங்களைத் தேர்ந்து கொள்வதில் தனித்தன்மை
காட்டியிருக்கிறார்.

     சார்வாகனின் ‘சாணி பொறுக்கும் சிறுமி’யும், வண்ண நிலவனின் ‘ரெயினீஸ் ஐயர்
தெருக்காரர்களும் சாணை பிடிப்பவனும்’ ஆகியவை ரசிக்கப்பட வேண்டிய நல்ல
கவிதைகள்.

     ‘தாமரை’யில் பிரசுரமான கவிஞர்களின் சொந்தப் படைப்புகளைவிட, மொழி
பெயர்ப்புக்கவிதைகள் நயங்கள் மிகுதியும் கருத்தாழமும் கொண்டிருக்கின்றன.
சிறியனவாகவும் உள்ளன என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். அப்படிப்பட்ட
வலிமையுள்ள கவிதைகள் எழுதத் தமிழ் நாட்டு முற்போக்குக் கவிஞர்களும் தேர்ச்சி
பெற்றால் நல்லது.

     உதாரணத்துக்கு இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.

     ‘முதற் படைப்பு’ - ரசூல் கம்சதோவ் எனும் ரஷ்யக்கவிஞர் எழுதியது. தமிழாக்கம்:
சிற்பி.
 
இந்தியாவில்
கடவுள் படைத்த ஆதி உயிர்
பாம்பு என்கிறார்கள்.
இல்லை-
உயரப் பறக்கும் கழுகுதான்
கடவுளின் முதல் படைப்பு
என்கிறார்கள் மலை வாசிகள்.
நான்
இவர்களோடும் அவர்களோடும்
இசையவில்லை;
மனிதர்களே முதற் படைப்பு
என்கிறேன்;
அவர்களில் சிலர்
பறக்கும் கழுகாய் மேலெழுந்தனர்
மற்றும் சிலர்
நகரும் பாம்பாய் நாசமுற்றனர்.