பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 202

     அவற்றில் ‘அன்று வேறு கிழமை’யும் ஒன்று. தலைப்பு எதுவும் இல்லாது அவர்
எழுதியுள்ள கவிதைகளில் சிலவும் இந்த இனத்தில் அடங்கும்.

     கவிதைகளுக்குத் தலைப்புகள் இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும்
இல்லை. தலைப்பு இல்லாமலே எட்டுக் கவிதைகள் மூன்று இரண்டு என்று பலவற்றை
வெளியிட்டு, அப்படி ஒரு மரபை உண்டாக்கிவிட முன் வந்தது ‘கசடதபற’.

     இவ்வாறு எழுதப்பட்டுள்ள கவிதைகளில் பலரகமானவையும் காணப்படுகின்றன.
முக்கியமான கருத்து எதையும் சொல்லாத வேடிக்கை எழுத்துக்கள், குழப்பம் உண்டாக்கு
பவை, எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை, இரு பொருள் கொண்டவை, நடப்புப்
பாங்கானவை, கனவுகள், மன வக்கிரங்களை உணர்த்துபவை போன்றவை.

     ‘புதுக்கவிதை புரியவில்லை’ என்ற பரவலான குறை கூறலுக்கு ஞானக்கூத்தனின்
‘எட்டுக் கவிதை’களும் அத்தரத்து இதர படைப்புக்களும் தம் பங்கைச் செலுத்தியுள்ளன.
இந்த விதமான கவிதைகள் கடுமையான கண்டனங்களுக்கும் தீவிரத் தாக்குதல்களுக்கும்
வியப்புரை- விரிவுரை - விளக்கவுரை முதலியவற்றுக்கும் இடமளித்துள்ளன. ஆகவே,
ஞானக்கூத்தனின் எழுத்துக்கள் சில ‘பரபரப்பூட்டும் படைப்பு’களாகவும் அமைந்துள்ளன
என்றும் குறிப்பிட வேண்டும்.

     வாசகர்களைக் குழப்ப வைக்க வேண்டும், அதிர்ச்சி (ஷாக்) அடையும்படி
பண்ணவேண்டும் என்ற எண்ணத்தோடு குறும்புத் தனமாகவும் குதர்க்கமாகவும் ஞானக்கூத்
தனது கவிதையாற்றல் அவ்வப்போது விளையாட விரும்புகிறது என்றே எனக்குத்
தோன்றுகிறது.

     இலக்கியத்தில் எதற்கும்- எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. எதையும் சொல்லலாம்;
எழுத்தில் சொல்லக்கூடாது என்று மூடி மறைக்கப்பட வேண்டிய ரகசியங்களோ
அசிங்கங்களோ கிடையவே கிடையாது; வாழ்க்கையில் இருப்பவற்றை - நி்கழ்வனவற்றை
ஏன் எழுத்திலும் காட்டக்கூடாது என்ற நோக்கு எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும்
எவ்வளவோ விளைவுக்கு இடம் அளித்துள்ளது.

     தமிழில் அந்த தாராளத்தனம் சில வருடங்களாகத்தான் தலைகாட்டி வருகிறது. இந்த
நோக்கை ‘கசடதபற’வும் ஓரளவுக்கு ஆதரித்துள்ளது. ஞானக்கூத்தனும் சிறிதளவு இந்த
வழியில் போயிருக்கிறார்.

     அதனால்தான் ‘ஒன்றுக்கிருந்தவன்’ மூத்திரம் நின்று பெய்யும் வியாபாரிப் பெண்’.
வயிற்றடி ரோமக்காட்டில் வருவாயைப் பொத்தி வைத்துப் படுக்கிறவன்’. முலைகளுக்குப்
போட்டி போடும் பிள்ளைகள், மனைவியின் உடம்பில் கொஞ்சம் கீழ்ப்புறத்தில் கிள்ளித்
தின்றவன், குசுப்போல் நாறும் வார்த்தைகள், ‘தூக்கிக் காட்றேன் தெரியுதா பாரு’ போன்ற
விஷயங்களை கவிதையில் கையாண்டுள்ளார். இதையெல்லாம் கவிதையில் எழுதலாமா
என்று பலப்பலர் கேட்கிறார்கள். எழுதலாமா கூடாதா? ஞானக்கூத்தன் இப்படி