பக்கம் எண் :

207  வல்லிக்கண்ணன்

நல்ல கவிதைகள். புதிதாகக் கவிதை எழுத முன் வந்தவர்களின் சிற்சில படைப்புகள்
‘கசடதபற’வில் இடம் பெற்றுள்ளன. ஜரதுஷ்டிரன் எழுதிய இழப்பு, விழிப்பு, பரிணாமம்
நல்ல கவிதைகள்.

     கல்யாண்ஜியின் கவிதைகளில் ‘இதயவீணை தூங்கும் போது’ அருமையானது.
 
  ‘பேசும் பாரென் கிளியென்றான்
கூண்டைக் காட்டி வாலில்லை
வீசிப் பறக்க சிறகில்லை
வானம் கைப்பட வழியில்லை
பேசும் இப்போது பேசுமென
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல
பறவை யென்றால் பறப்பதெனும்,
பாடம் முதலில் படியென்றேன்.
 
     எஸ்.கே. ஆத்மநாம் புதிய பார்வையோடு விஷயங்களை அணுகுகிறார். ‘என் கால்கள்
நடந்த தெரு’ பெற்ற பரிணாமங்களைக் கூறும் ‘காலம்,’ இங்கே வருமுன்னர் இருந்தவை’
பற்றிச் சொல்லும் ‘ஆரம்பம்’ போன்றவை பாராட்ட வேண்டிய முயற்சிகள். மற்றும் பலர்
அபூர்வமாக ஓன்றிரண்டு கவிதைகள் எழுதியுள்ளனர். ‘கசடதபற’மொழி பெயர்ப்புக்
கவிதையும் ஓரளவு பிரசுரித்தது.

     ‘கசடதபற’ புதுக் கவிதைத் துறையில் வேறொரு வேக மலர்ச்சிக்கும் வழி அமைத்துக்
காட்டியது. அதன் இதழ்களில் வந்த கவிதைகளில் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ‘புள்ளி’
என்றொரு ‘மினி வெளியீடு’ பிரசுரித்தது. ‘ஒரு ரூபாய் நோட்டை இரண்டாக மடித்த
அளவில்’ தயாரிக்கப்பட்ட அந்த வெளியீடு தமிழ் நாட்டின் எதிர்பார்க்க முடியாத
இடங்களிலிருந்தெல்லாம் புதிய புதிய ‘மினிக் கவிதைத் தொகுப்புகள்’ வெளியிடுவதற்கு
உற்சாகமூட்டும் முன் மாதிரியாகத் திகழ்ந்தது.

     ‘கசடதபற’வின் ‘புள்ளி’பற்றியும், அதைப் பின்பற்றி வெளிவந்த ஏனைய ‘மினி’
வெளியீடுகள் பற்றியும் உரிய இடத்தில் விரிவாக ஆராய்வேன்.