பக்கம் எண் :

215  வல்லிக்கண்ணன்

  பொன் மணல்
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம் (பாலை”)
 
போன்ற கவிதை தரிசனங்கள் ரசித்துப் பாராட்டப்பட வேண்டியவை.

     ‘அஃ’ தனது 4-வது இதழை கவிதைச்சிறப்பிதழாக தயாரித்திருந்தது. அதில்
கலாப்ரியாவின் ‘சக்தி’ கவிதைகள் அதிக இடம் பிடித்துக் கொண்டிருந்தன.

     தாகூரின் ‘கீதாஞ்சலி’யால் பாதிக்கப்பட்ட கவி, ‘சக்தி’யை எண்ணி ஆக்கியவை
அவை. ‘ரொம்பவும் முட்டிப்போன, அழுது வடிகிற, ஏக்கபூர்வமான, சந்தோஷங்
குதிபோடறவினாடிகளில் இதெல்லாம் வேறு வேறு வித பாவங்களுடன் என்னில் படிந்தவை.
இதுக்கொரு புனிதமிருப்பதாய் நான் நம்புகிறேன்’ என்று கலாப்ரியா குறிப்பிட்டுள்ளார்.

     ஆயினும் அவருடைய கவிதைகள் அவருடைய உணர்வுகளை மனப்பதிவுகள்,
அனுபவங்களை வெற்றிகரமாகப் பிரதிபலிக்க வில்லை. இவை ‘பரவாயில்லை’ என்று
சொல்லும் படியான தன்மையில் தான் உள்ளன. மேலும், இவற்றில் சில தாகூர்
கவிதைகளின் நிழல்கள் போலவே அமைந்துள்ளன.

     பாலகுமாரன், இயல்பான ஓட்டமும் ஓசைநயமும் நிறைந்த கவிதைகளைப்
படைப்பதில் வெற்றிகரமாக முன்னேறியுள்ளார். பேச்சு மொழி இவரது கவிதைகளுக்கு
அழுத்தமும் உயிர்ப்பும் ஏற்றுகிறது.

     ‘இடையினங்கள்’ என்றொரு இனிய கவிதை குறிப்பிடத் தகுந்தது.
 
  கொத்திக் கொண்டு போவாண்டி
ஆப்பிள் சிவப்பு என் பேத்தி
பாட்டி சொல்வாள் திடத்தோட
அம்மா விடுவாள் பெருமூச்சு.

வெட்டிப் பொழுது கழிப்பானேன்
வேலை தேடேன் எங்கேனும்
அப்பா சொல்வார் தரைநோக்கி
அண்ணன் முறைப்பான் எனைப்பார்த்து.

கொத்திக் கொண்டு போவதற்கு
ஜாதகப் பக்ஷி வரவில்லை
வெட்டிப் பொழுதின் விடிவுக்கும்
வேளை வரலை இதுநாளாய்.
 
வேலை தேடிக் கால் தேயு
வெளியே நடக்கத் தலைப்பட்டால்