| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 218 |
| இதை நம்ப வேண்டுமாம் நாமெல்லாம்! | ‘தேசப் பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி’ எழுதிப் பிரசித்தி பெற்ற மு.மேத்தா ‘தீபம்’ இதழ்கள் மூலம் நன்கு அறிமுகமாகியுள்ளார். மிகுந்த கவனிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்ற அவரது ‘கண்ணீர்ப்பூக்கள்’ ‘மரங்கள்’ போன்ற நீண்ட கவிதைகளும், ஓர் அரளிப் பூ அழுகிறது. காதலர் பாதை, உனக்காக உதிரிப்பூ போன்ற சிறு கவிதைகளும், ‘தீபம்’ இதழ்களில் வெளி வந்தவைதான். மகாத்மாவின் சிலைகள் உடைக்கப்படுவதைக் கண்டு மனம் குமைந்த மேத்தா, ‘தேசப்பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் மறு அஞ்சலி!’ என்ற சோக கீதத்தையும் இசைத்துள்ளார். பொதுவாக மேத்தாவின் கவிதைகளில் சோகமே அடிநாதமாக ஒலிக்கிறது. இயல்பான இனிய ஓட்டம் ஒலிசெய்கிற ‘கண்ணீர்ப்பூக்கள்’ என்ற கவிதையிலும் மனத் துயரமும் ஏக்கமுமே விஞ்சி நிற்கின்றன. | | வரங்கொடுக்கும் தேவதைகள் வந்தபோது தூங்கினேன் வந்தபோது தூங்கிவிட்டு வாழ்க்கை யெல்லாம் ஏங்கினேன்! அற்பர்களின் சந்தையிலே அன்புமலர் விற்றவன் அன்புமலர் விற்றதற்குத் துன்பவிலை பெற்றவன்! வஞ்சிமலர் ஊமைமன மாளிகையின் அதிபதி மாளிகையின் அதிபதிக்கு மனதிலில்லை நிம்மதி! மணவாழ்க்கை மேடையில் நான் மாபெரிய காவியம் மாபெரிய காவியத்தின் மனம் சிதைந்த ஓவியம் | போன்றவை விரக்தியையும், உள்ளார்ந்த இதய வேதனையையுமே பிரதிபலிக்கின்றன. ‘மரங்கள்’ கவிதையில் புதுமைக் கருத்துக்களும் நயமான படிமங்களும் நிறைந்துள்ளன. ‘எழுத்து’, ‘இலக்கிய வட்டம்’ இதழ்களில் பசுவய்யா என்ற புனைப்பெயரில் புதுமைச் சுவையும் அறிவொளியும் அர்த்த கனமும் பொதிந்த கவிதைகள் எழுதிய சுந்தரராமசாமி இடையில் பல வருஷங்கள் எழுதாமலே இருந்தார். எழுபதுகளில் மீண்டும் பசுவய்யா அஃ, கசடதபற, ஞானரதம் பத்திரிக்கைகளில் கவிதை எழுத முற்பட்டார். | | |
|
|