பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 224

  வளர்ந்து விட்டன
முட்புதர்கள்.
 
இப்படிப் பலபார்வைகளைச் சித்திரிக்கிறது ‘முள்’,
     அக்னிபுத்திரன், சத்தியமேவஜயதே! ஏகாதிபத்திய வேசியே!, நீங்கள் வல்லினங்கள்
அல்ல, புதிய போர்வை போன்ற கவிதைகளை வானம் பாடியில் எழுதியுள்ளார். இந்த
ஞானம் பொதிந்த மண்ணின் இன்றைய அவலங்களையும் சமுதாயப் பார்வை பெறாத
எழுத்துக் கலைஞர்களையும் வியட்நாமில் அட்டூழியம் புரிந்த அமெரிக்காவின் போக்கு
பற்றியும், இந்திய சுதந்திரத்தின் பயனற்ற தன்மை குறித்தும் இக் கவிதைகள் பேசுகின்றன.
முற்போக்குக் கருத்துக்களையும் சூடான எண்ணங்களையும் வெளியிடத் துடிக்கும்
அக்கினிபுத்திரன் சில சமயங்களில் ஆரவாரச் சொற்களை அநாவசியமாக அள்ளிக்
கொட்டுவதிலும் அடுக்கி வைப்பதிலும் ஆர்வம் காட்டிவிடுகிறார்.

     உதாரணத்துக்கு ஒன்று குறிப்பிடலாம்;
 
 
இமயச் சிகரங்களின் வெண்புதர் புற்றுகளில்
சில்லென்று தலைநிமிர்த்தும் பனிபாம்புகளில்
பிளவுண்ட நாநுனிகளின் விஷக்கடிகளால்
இந்த தேசத்தின் தேகம் நீலம் பாரித்துப்போன
ஒரு மயக்க இருள் தழுவிய முயக்கத்தில்
இந்த மண்ணின் ஆத்மா உறைந்துவிட்ட
ஒரு மரண நிழலில் படிந்த முற்றத்தில்
விதவைத் தெருவின் புழுதியின் மேலே
வஞ்சிக்கப்பட்ட எம் பூமியின் மழலை
எப்படிப் படுத்திருக்கும்?
எப்டிப் படுத்துறங்கும்?


(புதிய போர்வை)
 

     சக்திக்கனலின் ‘ஒரு ரோடு ரோலரின் பவனி, தமிழன்பனின் ‘நயனதாரா’, கங்கை
கொண்டானின் ‘சில நைலான் கனவுகள் எரிகின்றன’, பிரபஞ்சனின் ‘துவங்காத புயல்களின்
பிரார்த்தனைகள்’, பா. செயப்பிரகாசத்தின், ‘மக்கள் கவிஞனுக்கு ஒரு விண்ணப்பம்’
மு.மேத்தாவின் ‘தாலாட்டுக் கேட்காத தொட்டில்கள்’ போன்ற பல இனிய கவிதைகளை
‘வானம்பாடி’ தந்துள்ளது.

     வானம்பாடிக் கவிஞர்கள் இன்றைய சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளையும்,
சீரழிவுகளையும் கண்டு கோபம் கொள்கிறார்கள். பரிகசிக்கிறார்கள், பழித்துக் குறை
கூறுகிறார்கள். இன்றைய இழிநிலை மாறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
சுரண்டலையும், சுரண்டல் சமுதாயத்தைப் பாதுகாக்கும் தத்துவங்கள். கடவுள்கள், சாதி
சமயங்கள் முதலியவற்றையும் கண்டிக்கிறார்கள்; விமர்சனம் செய்கிறார்கள். காந்தியையும்
ஏசுவையும் கண்ணனையும் புதிய நோக்கில் கண்டு, சிந்தனைகளை வளர்க்கிறார்கள்.

     நீளம் நீளமான கவிதைகள் எழுதுவதில் உற்சாகம்காட்டிய வானம்பாடிக் கவிஞர்கள்
பின்னர் சிறுசிறு சிந்தனைகளையும் புதிர்களையும் புதிய பொருள் - புது விளக்கம்
சொல்லும் சாமார்த்தியப் பிரயோகங்களையும் கவிதை என்று பெயர் பண்ண முயன்றிருப்