பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 226

  கோடி நாட்களாய்
ஜொலிக்கத் தவிக்கும்
குட்டி நட்சத்திரமே!
அம்மா மாமா
யாரும் இல்லையோ?
கோடம்பாக்க
புரோக்கரைப் பாரேன்
குறைந்த நாட்களில்
குண்டு நிலா ஆகலாம்.
வானரசன்
பொற்காசுகள்
விட்டெறிந்து
விட்டெறிந்து பார்ப்பான்,
ராக்கிழவி
எப்படியம்மா ஓப்புவது
என்றுள்ளம் வேர்ப்பாள்.
அடிமேல்
அடி போட்டால்
காசால்...
நிலாமகள்
மாதவியாய்
விலை போனாள்
ஓர் நாள்.
 
‘நட்சத்திரப் பூக்க’ளில் இவை சில.

     கால காலமாக, கதை கவிதை எழுதுகிற படைப்பாளிகள் கையில் ‘படாதபாடு படும்’
சில விஷயங்கள் உண்டு. அவற்றில் அகலிகை கதையும் ஒன்று. வெவ்வேறு
காலகட்டங்களில், கவிஞர் கதைஞர் நாடகாசிரியர் அநேகர் அவரவர் கற்பனைக்கும்
மனோபாவத்துக்கும் கண்ணோட்டத்துக்கும் ஏற்றபடி அகலிகை கதைக்கு ‘புது மெருகு’
தீட்டி, மகிழ்ந்திருக்கிறார்கள். இப்பொழுது வானம்பாடிக் கவிஞர் ஞானியும் அகலிகையை
கவனித்துள்ளார். ‘வரலாற்றில் உடமையும் உழைப்பும் பிரிந்த நிலையில்-ஆதிக்கமும்
அடிமைத்தனமும் ஏற்பட்ட நிலையில் - உடலும் உள்ளமும் பிளவுண்ட நிலையில் -
ஆணும் பெண்ணுமாக மனிதன் சிதைந்த நிலையில் - தெய்வங்களும் பேய்களும் விரிந்த
நிலையில்- இவை ஒவ்வொன்றிலும் மற்றதன் உண்மை சிக்கித் தவித்த நிலையில்,
மனிதனின் அவலமே இந்தப் படைப்பாக கிளைகள் விரிந்திருக்கிறது. இந்த முறையில்
அகலிகை வரலாற்றின் ஆத்மாவாகிறாள்’.

     ஞானியின் ‘கல்லிகை’ காவியத்தை இவ்விதம் அறிமுகப் படுத்துகிறார் அக்னிபுத்திரன்.

     உழைக்காமலே உல்லாசமாகவும் சோம்பேறித்தனமாகவும் பொழுதுபோக்கி
வாழ்கிறவர்கள். அவர்களின் பிரதிநிதியாக கௌதமன் சித்திரிக்கப்படுகிறான். இந்திரன்,
உழைப்பவர்களது - உழைப்பு மூலம் சூழ்நிலையில் புதுமைகள் புகுத்துவோரின் - உருவகம்.