புத்தகங்கள் | பத்திரிக்கைகளில் எழுதுவதோடும் சிறு சிறு தொகுப்புகளாக வெளியிடுவதோடும் திருப்தி காணாத நிலைமை ஏற்பட்டு விட்டது கவிதை எழுதிவோரிடையே. எனவே தங்கள் கவிதைகளை புத்தகங்களாகத் தொகுத்து வெளியிடுவதில் புதுக்கவிதைக்காரர்கள் ஆர்வம் காட்டினார்கள். 1970களின் ஆரம்பம் முதலே இந்த ஆர்வம் செயல் வேகம் பெற்று வந்துள்ளது. புதுக்கவிதை வரலாற்றில் முதல்முதலாக நா. பிச்சமூர்த்தியின் கவிதைகளைத் தொகுத்து ‘காட்டு வாத்து’ என்ற புத்தகமாக சி.சு. செல்லப்பா வெளியிட்டார். இந்த ‘எழுத்து பிரசுர வெளியீடு’ 1962 (ஆகஸ்டில்) பிரசுரமாயிற்று. அதை அடுத்து, 1962 அக்டோபரில் ‘புதுக்குரல்கள்’ என்ற எழுத்து பிரசுரம் வெளிவந்தது. 24 கவிகளின் 63 கவிதைகள் கொண்டது. நா. பிச்சமூர்த்தியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘வழித்துணை’ 1964ல் பிரசுரமாயிற்று. இதுவும் எழுத்து பிரசுரம்தான். 1965ல் தி.சோ. வேணுகோபாலன் கவிதைகள் ‘கோடைவயல்’ என்ற புத்தகமாக உருப்பெற்றன. எழுத்து பிரசுரமான இதில் 29 கவிதைகள் உண்டு. இவை பற்றி இத்தொடரில் அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறேன். 1970ல் எஸ். வைத்தீஸ்வரன் தனது கவிதைகளை ‘உதயநிழல்’ என்ற தொகுதியாக வெளியிட்டார். இதில் 62 கவிதைகள் இருக்கின்றன. நா. காமராசனின் ‘கறுப்புமலர்கள்’ 1971ல்வெளிவந்தது. மரபுக்கவிதைகளோடு, நா. கா. எழுதிய ‘வசன கவிதை’களும் இதில் அடங்கியுள்ளன. அஞ்சலி, செம்மண், பிச்சைக்காரி, குடிகாரன், புல், நடைபாதை, தளிர், புழுதி, ஊமை, வானவில், விலைமகளிர் போன்ற பல விஷயங்களைப் பற்றியும் அவர் எழுதியிருக்கிறார். ஷண்முக சுப்பையாவின் குழந்தைக் கவிதைகள் 25’கண்ணன் என் தம்பி’ என்ற புத்தகமாக 1972ல் பிரசுரமாயின. இத்தொகுப்புக்கு நகுலன் முன்னுரை எழுதியுள்ளார். ‘இன்குலாப் கவிதைகள்’ என்ற தொகுதி 1972ல் வெளிவந்தது. கவிஞர் இன்குலாப்பின் முற்போக்குக் கவிதைகளை ‘மகரந்தங்களிலிருந்தும் துப்பாக்கி ரவைகள்’ என்று இளவேனில் அறிமுகம் செய்து நீண்ட முன்னுரை எழுதியுள்ளார். கண்மணி ராஜம், யுகப்பிரளயம், கிரௌஞ்ச வதத்திற்குக் கேள்விகள் இல்லையா? நாடோடிகள், வயல் வெளிகளின் கதாநாயகன், பிரமிடுகளிலிருந்து அடிமைகள் விடுதலைப் பிரகடனம் செய்கிறார்கள் போன்ற புதுமை நோக்கும் உணர்ச்சி வேகமும் கொண்ட படைப்புகள் இதில் உள்ளன. ‘ஆக்டோபஸும் நீர்ப்பூவும்’ என்ற தொகுப்பு 1972ல் பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்தது. குவேரா, தமிழவன், ஆராமுதம் | | |
|
|