| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 238 |
அமையும். இக்காலப் பகுதியில், தமிழகத்திலும் புதுக்கவிதை முயற்சிகளில் தேக்கமும், புதுக் கவிதை எழுதுவோரிடையே உற்சாகமின்மையும் காணப்பட்டன. ஈழத்திலும் அதன் தாக்கம் ஏற்பட்டிருந்தது என்றும் கூறலாம். ‘எழுத்து’ சஞ்சிகை தோன்றியதும், தமிழ் நாட்டில் அறுபதுகளில் புதுக்கவிதை புத்துயிர்ப்பும் புது வேகமும் பெற்று வளரலாயிற்று. ‘எழுத்து’ ஈழத்தவர் பலரை புதுக் கவிதைப் படைப்பில் ஈடுபடச் செய்தது. தருமு சிவராமு இ. முருகையன் நா. இராமலிங்கம், மு. பொன்னம்பலம் போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். 1970-72 அளவில் ஈழத்தின் புதுக்கவிதை பெருவளர்ச்சி கண்டது. எழுதுவோர் அதிகரித்தார்கள். ‘மல்லிகை’ முதலிய சஞ்சிகைகள் புதுக்கவிதைக்கு அதிக இடம் தந்து ஆதரிக்கலாயின. சமுதாயக் கிண்டல்களும், மிகமென்மையான உணர்ச்சி (காதல் முதலிய) வெளிப்பாடுகளும் கவிதை உள்ளடக்கம் ஆக இடம் பெற்றன. 1972ல் ‘தென்னிலங்கையின் முதலாவது புதுக் கவிதை ஏடு’ என்று ‘க-வி-தை’ எனும் பத்திரிகை தோன்றியது. திக்குவல்லை கமால், சம்ஸ், நீள்கரை நம்பி, மோனகுரு ஹம்ஸா முதலியோர் இதில் எழுதினார்கள். உழைப்பாளி வர்க்கம் பற்றியும், சமூகக் குறைபாடுகள் பற்றியுமே பெரும்பாலும் கவிதைகள் எழுதப்பட்டன. தற்போது புதுக்கவிதை பற்றிய கட்டுரைகள் பல எழுதப்படுகின்றன. ‘தினகரன்’ பத்திரிகையில், ’35 ஆண்டுக்கால புதுக்கவிதை வளர்ச்சி’ என்ற தலைப்பில் மு. சிறீபதி தொடர்கட்டுரை எழுதினார். வரலாற்று அடிப்படையில் புதுக் கவிதை சம்பந்தமான முதல் ஆய்வுக் கட்டுரை இதுதான் என்றும் அறிவிக்கப்படுகிறது. கலாநிதி க. கைலாசபதியின் மேற்பார்வையோடு, செ. யோகராஜா எழுதியுள்ள ‘ஈழத்துப் புதுக் கவிதையின் சில போக்குகள்’ என்ற கட்டுரையில் காணப்படும் சில கருத்துக்களை இங்கு எடுத்து எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். “ஏறத்தாழ, கடந்த பதினைந்தாண்டுக் கால ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியில் அவதானிக்கத்தக்க சில பண்புகளுள், இவற்றை மதிப்பீடு செய்யும்போது தமிழ்நாட்டுப் புதுக்கவிதைப் போக்கிலிருந்து வேறுபட்ட சில பண்புகளையும், தனித்துவப்போக்குகளையும் இனங்காண முடிகிறது. இன்றைய ஈழத்துப் புதுக்கவிதையாளருள் பெரும்பாலானோர் ‘எழுத்து’ சஞ்சிகையின் தாக்கத்தால் எழுதத் தொடங்கியவர்களே, ‘எழுத்’தில் வெளிவந்த புதுக்கவிதைகளே புதுக் கவிதை எழுதும் உந்துதலையும் ஏற்படுத்தின. எனினும், ‘எழுத்து’ காட்டிய வழியில் இவர்கள் செல்லவில்லை; எழுத்தில் பெரும்பாலானோர் எழுதியது போன்றோ, அல்லது இன்னும் எழுத்துப் பரம்பரையினர் சிலர் எழுதுவது போன்றோ, ‘தனிமனித அக உளைச்சல்கள், கனவுகள், ஏமாற்றங்கள், மரணம், விரக்தி, காமம், போன்ற விஷயங்கள் ஈழத்துப் புதுக்கவிதையின் உள்ளடக்கமாக அமையவில்லை. மாறாக, சமுதாய நோக்குடைய - ஏதோ ஒரு விதத்தில் சமுதாயக் குறைபாடுகளைப் பிரதிபலிக்கிற-புதுக்கவிதைகளே இங்கு மிகுதியாக வெளி வருகின்றன. ஈழத்து நாவல், சிறுகதை என்பவற்றில் காணப்படும் Seriousness தன்மை | | |
|
|