சிலப்பதிகாரக் ‘குன்றக் குரவை’யில் வரும் ‘உரைப் பாட்டு மடை’ இது. உரைப்பாட்டை ‘நடுவே மடுத்தல்’ என அடியார்க்கு நல்லார் பொருள் கூறுகிறார். அரும்பதவுரையாசிரியரும் அதனை, ‘உரைச் செய்யுளை இடையிலே மடுத்தல்’ என்பர். (வேட்டுவ வரி, 7-ம் அடியின் பின்வரும் ‘உரைப் பாட்டை’ப் பார்க்க) இன்னும் இவ்வாறே ‘ஆய்ச்சியர் குரவை, வாழ்த்துக் காதை’ முதலியவற்றிலும் இவ்வுரைப் பாட்டு இடம் பெறுகின்றது. இவ்விதம் வரும் உரைப்பாட்டு எல்லாம் வசன கவிதை உணர்ச்சியையே உண்டாக்குவன. உரை-கட்டுரை என்பன வசனத்தையும், பாட்டு-செய்யுள் என்பன கவிதையையும் குறிப்பிடுவதால், உரைப்பாட்டு-கட்டுரை செய்யுளென்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுவனவெல்லாம் வசன கவிதையே என்று தெளிய இடமுண்டு. சிலப்பதிகாரப் பதிகத்தில் ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என வரும் பகுதிக்கு ‘உரையிடை இட்டனவும் பாட்டுடையனவுமாகிய செய்யுளை’ என்று கருத்துரைக்கும் அடியார்க்கு நல்லார், பின்னரும் ‘உரைபெறு கட்டுரை’ இவை முற்கூறிய கட்டுரை-இவை முற்கூறிய ‘கட்டுரைச் செய்யுள்’ எனக் குறித்திருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.’ 1-10-43-ல் வெளியான கலாமோகினி இதழில் ‘வசன கவிதை’ பற்றி கலைவாணன் எழுதிய கட்டுரையின் எதிரொலி இது. ‘வசன கவிதை தமிழுக்குப் புதிது’ எனும் கொள்கையை மறுத்து, அது முன்னரும்- வெவ்வேறு பெயர் வடிவில்-இலை மறை காய் போல-வழங்கியதெனக் காட்டுவதே எமது நோக்கம்.” | (கலாமோகினி-33) | | |
|
|