பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 40

கு.ப.ரா. கவிதைகள்

 
     புதுக்கவிதை வரலாற்றில் கு.ப.ராஜகோபாலனின் கவிதைகளுக்குத்
தனியான-முக்கியமான-ஒரு இடம் உண்டு. அவர் வசன கவிதைகள் தான் எழுதினார்.
அதிகமாகவும் எழுதி விடவில்லை. ‘மணிக்கொடி’ நாட்களில் 24 கவிதைகள், ‘கலா
மோகினி’யில் 5 கவிதைகள். இவ்வளவே-நான் அறிந்தவரை-அச்சில் வந்தவை.

     ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’
என்று கொள்கை அறிவிப்பு செய்து கொண்டு, மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறையாகப்
புது வடிவம் பெற்ற ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில், 1943 ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 1
முடிய, கௌரவ ஆசிரியர் என்றும், டிசம்பர் 15 முதல் 1944 ஏப்ரல் இறுதிவரை ஆசிரியர்
ஆகவும், கு.ப.ரா பணிபுரிந்திருக்கிறார். கவிஞர் திருலோக சீதாராம் அதன் ஆசிரியராகவும்,
நிர்வாக ஆசிரியராகவும் செயலாற்றினார். இந்த ஒன்பது மாதங்களில் கு.ப.ரா ‘கிராம
ஊழிய’னில் கதை, கட்டுரை, வரலாறு என்று பல படைப்புகள் எழுதியிருப்பினும், ஒரு
கவிதைகூட எழுதவில்லை. இது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு (அதிசயச்) செய்தியாகவே
எனக்குப் படுகிறது.

     ந. பிச்சமூர்த்தி கூட இரண்டே இரண்டு கவிதைகள்தான் எழுதியிருக்கிறார். கதைகள்,
‘மனநிழல்’ கட்டுரைகள் பல எழுதியுள்ளார். அவ்விரு கவிதைகளில் மிக அருமையானது.
 

ஏனோ?

 
சந்த்ரன் நல்லாக் காயுரண்டா
சின்ன ராயப்பா-அந்த
மந்த்ரத்துலே மயங்கி நிக்கிது
மட்டை குட்டை எல்லாம்,

பாம்பெறிந்த சட்டைபோல
சின்ன ராயப்பா-இந்த
ஆம்பல் வர்ணரோட்டு ரொம்ப
அழகு பொங்குது,

வெளிச்சத்தாலே ஆகாசத்தை
சின்ன ராயப்பா-யாரோ
பளிங்கைப்போல் பண்ணிவிட்டா
சின்ன ராயப்பா.

அழகும் சொகமும் சொக்குதடா
சின்ன ராயப்பா-எங்கும்
மழலை பேசும் காத்தெக்கேளு
சின்ன ராயப்பா.