| நிலவும் நீயும் எனக்கிருந்தும் சின்ன ராயப்பா-நல்ல நெல்லும் நெழலும் நெறஞ்சிருந்தும் சின்ன ராயப்பா அந்த பனங்கொளத்து வீட்டுக்காரி நடை குலுக்கிலே-தொலை உலவிச் செல்லுதாவியேனோ சின்ன ராயப்பா. | கு.ப.ரா. தனது கவிதைகளை ‘கருவளையும் கையும்’ என்ற தலைப்பில் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று பெரிதும் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய ஆசை அவர் காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரியே; நிறைவேற வழி ஏற்படவில்லை. அந்தத் தொகுப்பு வெளிவந்திருந்தால் அது தமிழ்க்கவிதை உலகில் குறிப்பிடத் தகுந்த ஒரு அருமையானப் படைப்பு நூலாகத் திகழ்ந்திருக்கும். | | ‘கருவளை யொலியில் கொள்ளை கொண்டென்னை ஆழ்த்தின காதலில், கருத்திழந்துருகினேன்; பருவமப்போது பெண் எழிற் குவியலில் சூழ்ந்திருந்த சோர்வில் சுவை கண்ட கோலம்’ | அந்தச் சுவையில் அவர் ‘உள்ளப் பூவை உதிர்த்தெடுத்து, மாலை தொடுத்தவுடனே மங்கை கை கொடுத்த’ அன்பு அஞ்சலிகளே கு.ப.ரா. வின் பெரும்பாலான கவிதைகள். கருவளையும் கையும், தலைவியின் தேர்தல், கவிதைப் பெண்ணுக்கு, பெண்ணின் பிறவி ரகசியம், ஏன்? சதையை மீறியது, எப்பொழுது புத்துயிர், நிச்சயம், இடைவேளை உருவம், நீயும் நானும், சோர்வும் குழைவும், என்னதான் பின்?, விடுதலை, விரதம், உரம், உயிர், தரிசனம், மாங்கனிச் சுவைப்பு ஆகியவை மென்மையான உணர்வுகளை இனிமை எழிலாய், கற்பனை நயத்தோடும் கவிதை வளத்தோடும் சித்திரிப்பனவாகும். இவற்றிலே பல கவிதைகள் பின்னர் ‘எழுத்து’ இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. அவற்றில் அநேகம் ‘வாசகர் வட்டம்’ பிரசுரமான ‘சிறிது வெளிச்சம்’ என்பதில் இடம் பெற்றுள்ளன என்று நினைக்கிறேன். பெண்மையை வியந்து போற்றும் இவ் அகத்துறைக் கவிதைகள் தவிர, வேறு பொருள்களைப் பாடும் சில கவிதைகளையும் கு.ப.ரா. எழுதியிருக்கிறார். ‘வாழ்க்கை’ பற்றிய அவரது சிந்தனை விசேஷமானது- | | வாழ்க்கை ஒரு வெற்றி. ஒரு துடிப்பு ஓரு காதற்பா, ஒரு இசை, மண்ணின் மாயமோனையில் பிறந்தது. அரைத் தூக்கத்திலும் அதிசயத்திலும் அது உதிக்கிறது | | |
|
|