பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 62

பிரசுரிக்க முற்பட்டபோது, அவர் தடுத்து விட்டார்.

     அவரது படைப்புக்கு உதாரணமாக ஒரு காட்சியைத் தர வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். இது ‘சினிமா உலகம்’ இதழில் பிரசுரமானது.
 
            1

அவள் யார்?
வான் கடல் மீது மதியத் தோணி
மிதக்கும் போது விரிகடல் மீதோர்
புது மதி மிதந்து புன்னகை பூத்தது
அவள் யார்?
அழகுக் கடலை அமுதக் கோலால்
கடையத் திரண்ட காதலின் வெண்ணெய்

          2

கூந்தல்
காதற் பறவையின் கவினுறுஞ் சிறகுகள்
வகிடு
கருமுகில் திரளிடைக் கதிர்விடும் மின்வரி

          3

மதிமுகம் என்பார்;
மதியை யம்முகத்திற் கொப்பிடல் மடமை
ஓண் மதி யவள் முகம் ஓரளவொக்கும்

          4

கண்கள்,
வான் போல் விரிந்தவை, வாரி போல் ஆழ்ந்தவை
கால் போற் கலங்கும், பனி போல் மயங்கும்,
வசந்தமாய்ச் சிரிக்கும், வேனிலா யெரிக்கும்,
காதலிற் களிக்கும், கடை நுனி சுளிக்கும்;
கண்ணூடாடும் கருவிழிப் பாவைகள்
வெள்ளை மதுவில் மிதக்கும்
நாகப் பழம்;
வைர வெள்ளத்தே மரகதத் தோணிகள்,
நிலவுக் கடலில் நீந்தும் வண்டுகள்
அக்கண்ணுக் கிணை இக்கண்.

          5

பூவிற் கனியுண்டாம், கனியிற் பூ மலரா;
ஆயினும் அவளது
கன்னம் என்னும் கனிந்த மாங்கனியில்
காதலாம் ரோஜாக் கவின் மலர் சிரிக்கும்

          6

காதல் மதுக் கடல் கனிவாய், அதன் கரை