பக்கம் எண் :

69  வல்லிக்கண்ணன்

பிக்ஷு அவற்றைக் குறிப்பிடும்போது ஒவ்வொன்றிலும் புதுமை தெரிகிறது; தனி நயம் மலர்கிறது.
     உதயம் பற்றி அவர் கூறுவது இது;
 
  செம்பட்டுச் சல்லடம்
சொகுஸாக உடுத்தி
செம்மலர்க் கூடையை
இடுப்பில் இடுக்கி
சதங்கைகள் சிலம்ப
கீழ்வானில் முளைத்தாள்
இரவென்னும் பெட்டியை
உஷை மெள்ளத் திறந்தாள்.
சூழிருள் சிறையுற்ற
கதிரவன் கிரணம்
தும்பைத் தெறித்த
மாடுபோல் பாய்ந்தது.
 
     ‘இருளும் ஒளியும்’ கவிதையில் இவ்விதம் ஒரு வர்ணனை காணக்கிடக்கிறது.
 
  இருள் மலையின் மைக் குகையில்
ஒளிமாடு ஓலமிட
கதிர்க்கன்றின் சோக ஒலி
கடுஞ்சிறையில் கம்ம;
பரிதியெனும் பொன் பருந்து
பாய்ச்சலின்றிக் கிடக்க
ஒளியும் இருளும் கலந்துகூடி
நற்பாம்பும் சாரை போலும்
பின்னிக் காலம் ஓடலாச்சு.

     இந்த விதமான இனிய வர்ணிப்புகள் பிச்சமூர்த்தி கவிதைகளில் நிறையவே உள்ளன.
இயற்கையின் வளங்களை அழகாக வர்ணிக்கும் வெறும் கவிதைகள் அல்ல பிக்ஷுவின்
படைப்புகள். இயற்கையையும் மனித வாழ்வையும் பொருத்திக்காட்டும்
தத்துவவெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. ஒளியின் அழைப்பு, கிளிக்கூண்டு, கிளிக்குஞ்சு,
காற்றாடி, பூக்காரி போன்றவை. காட்சி இனிமைகள் நயமான கவிதைகளாகப் பிறந்துள்ளன.
மார்கழிப் பெருமை, மழைக்கூத்து போன்றவை இந்த ரகத்தவை.

     சாதாரண விஷயத்தைக்கூட அருமையான கவிதையாக்கி விடுகிறது. பிச்சமூர்த்தியின்
ஆற்றல், மூலையிலே கிடந்த தாளையும், சாலையிலே கிடந்த குச்சியையும், கூரையிலே
கிடைத்த துணியையும், பானையிலே கண்ட சோற்றையும் கொண்டு. புத்துருவம் கொடுத்து
புதுப்பட்டம் ஆக்கிவிடுகிற திறமையைப் போன்றது அவருடைய கவித்திறமை. காற்றாடி
எனும் சிறு பொருளும் அவரது கவிதையில் உணர்ச்சியும் அழகும் பெறும் அற்புதச்
சித்திரமாகி விடுகிறது.