பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 70

  மகுடி மேல் சீறிவரும்
நாகம் போல் ஆடிற்றடி
மின்னலைப் போல் வெகுண்டு
முகிலிடையே எரிந்ததடி
கத்தியைப் போல் சுருண்டு
வெளியெங்கும் சுழன்றதடி
ராகுவைப் போல் எழுந்து ஓடி
சூரியனைத் தீண்டிற்றடி,
குரங்கைப் போல் வாலடித்து
கர்ணம் பல போட்டதடி,
காலைப் புறாவைப் போல
புள்ளியாய் மறைந்ததடி!

     இயற்கையின் பல்வேறு கோலங்களையும், லீலைகளையும் அவர் கண்டு
ரசித்திருப்பதை அவரது கவிதைகள் அனைத்திலும் காணலாம். மழையின் கூத்தை
கம்பீரமான வர்ணிப்பாக ந.பி. சித்திரிப்பதை, முன்பே இத்தொடரில் நான் எடுத்தெழுதிய
கவிதை விளக்கியிருக்கும். பூக்காரி கவிதையிலும் மழை நேரம் வர்ணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சோகசித்திரமாக.

     அம்மழை நேரக்காட்சி மாபெரும் வாழ்க்கை உண்மை ஒன்றை சுட்டுவதற்காகவே
காட்டப்படுகிறது.

     வாழ்க்கை பலாத்கார மயம் ஆகிவிட்டது. போட்டி, பொறாமை, சண்டை, சாவுதான்
எங்கும் நடம் புரிகின்றன. அவற்றிடையே அன்பு, அகிம்சை என்கிற போதனை
எடுபடுவதில்லை. வாழ்க்கைச் சந்தையிலே இத்தெய்வக் குரல் விலை போவதில்லை. மழை
நேரத்தில் ஜாதி மல்லிகையைக் கூவி விற்பனை செய்ய முயலும் பூக்காரியின் பொங்கும்
குரல் மதிப்பிழந்து போவது போல்தான் இதுவும்.
 
  ‘சாரலின் கடுஞ் சினத்தில்
பூ மோகம் ஆடவில்லை,
பூக்காரி குரலினொடு
கூடிற்று மழையின் கண்ணீர்’

     அதே மாதிரி ‘ஊரெங்கும் விஷப்புகை, வானெங்கும் எஃகிறகு, தெருவெங்கும்
பிணமழை பீரங்கிக்குரல்’ பேசுகிற உலகச் சூழ்நிலையில் அன்பும் அகிம்சையும் பேச
முற்படும் ‘ஆதிக்குரல்’ அமுங்கி விடுகிறது.

     எனினும், கவி நம்பிக்கையை இழந்து விடவில்லை. பிச்சமூர்த்தியின் கவிக்குரல்
நம்பிக்கை வறட்சியோடு தொனிப்பது அல்ல.

     (உலகத்தார்) ருத்ரனின் வெறிக்கூத்தில் கடுமோகம் கொண்டுவிட்டார்.
 
  ‘காமனை எரித்த ருத்ரன்
கண்சிமிட்டில் தணிந்து போவான்.