பக்கம் எண் :

77  வல்லிக்கண்ணன்

     இயற்கைதந்த அமைப்புடன், காலத்தைக் கடக்க முடியாது. ஆகவே,
இப்பொருள்களால் உதிரத்தை மாற்றுவோம். காலப் போக்கில் உதிரம் மாறி, நவமனிதன்
தோன்றுவான். நமனழைப்பு நண்ணிடாது. நமனுக்கு அன்று வேலை இல்லை. அழிவை
வெல்லும் அமுதம் நினைப்பை அழிக்கும் அமுதம்தான் என்று ‘பாதை கண்டவன்’ தெளிவு
படுத்துகிறான்.

     ஞானி உலக இயல்பினை எண்ணிக்கொள்கிறார்.
 
  ஒளிதோன்றச் செய்த அன்று
இருள் தோன்றச் செய்தாய் ஏனோ?
உருத் தோன்றச் செய்த அன்று
நிழல் தோன்றச் செய்தாய் ஏனோ?
உண்மையை அறிவில் நாட்டிப்
போலியும் ஏன் சமைத்தாய்?
உள்ளத்தில் அமுதம் காட்டி
உலகினில் நறவேன் வைத்தாய்?
 
என்று ஈசனை நினைவு கூர்கிறார்.

     ‘அக்னி’ என்பது நெருப்பின் இயல்பைக் கூறுகிறது.

     ஆதிகாலத்தில் அரணிக் கட்டைகளின் உதவியில் தீபிறந்தது. அக்கட்டைகளையே
தின்று தீர்த்தது.

     இடைக்காலத்தில், மனிதர் ‘சிக்கிமுக்கிக் கல்’ மூலம் நெருப்பை உண்டாக்கினார்கள்.
தீமரங்கள், காடுகளை நாசமாக்கின.

     நடைக்காலம், தீக்குச்சி, மின்சாரம் தோன்றின. சொன்ன பேச்சைக் கேட்கும் தீ என்று
மாந்தர் கருதினர். ஆனால், தீக்குச்சித் தொழிற்சாலையில் தீ: மின்சாரத்
தொழிற்சாலையிலும் தீ அக்னி பகைவனாகவே இருந்தது.

     அரணிக் கட்டைகள், தீ, பத்துவிரல்கள், மனிதர்; அரணியும் சிக்கிமுக்கியும் இவற்றின்
உரையாடல் போல் இந்நெடுங் கவிதை எழுதப் பட்டுள்ளது. முடிவாக தீ சொல்கிறது-
 
  என்னிடமே பகை கொண்டு
ஏற்றிவிட முயன்றிட்டாலும்
நொடியில் நான் எரிவேன், அணைவேன்
நிமிஷத்தில் சாவேன். பிறப்பேன்,
வாழ்வென்றெனக் கொன்றில்லை
தாழ்வென்று ஏதுமில்லை,
இளமையுடன் இருப்பேன் என்றும்
எரியும் தொழில் தலை எழுத்து
நட்பென்னும் உறவிலுண்டு
பகைமையின் போல் விதைகள்
கட்டுதிட்டக் கவனத்தோடு,
காதலித்தால் என்னை நீங்கள்,
கால் செருப்பாய் சேவை செய்வேன்;
குழந்தை போல் சுகமளிப்பேன்;