பக்கம் எண் :

85  வல்லிக்கண்ணன்

உருவகங்கள், ஏக்கங்கள், ஆசைகள், வார்த்தைகள், மௌனம் எல்லாமே, என் கவிதைக்கு
விஷயம்; வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருப்பது போலவே என் கவிதைக்கு சிக்கலும்
சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தெளிவு தொனிக்க
வேண்டும்; ஆனால் சிக்கல் விடுவிக்கக் கூடாததாகவும் இருக்கவேண்டும். கவிதை நயம்
எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும்-அதே சமயம் பூராவும்
புரியாமலும் இருந்துவிடக் கூடாது. திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க, ஒரு தரம்
படிப்பவருக்கும் ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக்
கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும் இந்தப் புதுக் கவிதையிலே என்றுதான்
எண்ணுகிறேன்.’

(‘சரஸ்வதி’ மலர்-புதுக்கவிதை கட்டுரை)


     க.நா.சு. வுன் ‘கவிதை’ எனும் கவிதையைப் படித்துப் பாருங்களேன்!
 
  எனக்கும்
கவிதை பிடிக்காது,
மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்து விட்டான்:
இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்திய மாயின
என்று யார்
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்
எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகுதான்.
ஆனால் அது போதவே
போதாது.
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே, போதாது
என்றுதான், ஒன்றன் பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்
துறைகள்
தோன்றின, நாடகமும், நாவலும், நீள்
கதையும், கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியிராது; ஆனால் அவையும்தான்
திருப்தி தருவதில்லையே!
அதனால் தான்
நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதனுக்குக் கலை எதுவும் திருப்தி தராது.
மேலே மேலே என்கிற ஏக்கத்தைத்தான் தரும்
கலையின் பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது கடவுளே
இன்னமும் உயிர் வைத்துக் கொண்டிருப்பது
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.