பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 86


     ‘எழுத்து’ முதல் ஏட்டில் தந்த கவிதைகளைப் பார்த்துவிட்டு, தி.சோ.
வேணுகோபாலன், டி.கே. துரைஸ்வாமி, ‘பசுவய்யா’ என்ற பெயரில் சுந்தர ராமசாமி
ஆகியோரும் கவிதைகள் எழுத முற்பட்டார்கள்.

     ‘கவி-வேதனை’ என்ற வேணுகோபாலன் கவிதை 2-வது ஏட்டில் இடம் பெற்றுள்ளது.
பிறகு 9, 11 ஏடுகளில் ‘நான் கவியானேன்’ ‘வெள்ளம்’ எனும் கவிதைகள் வந்துள்ளன.
துரைஸ்வாமியின் கவிதைகள் (காத்த பானை, கடன்பட்டார், சிலை) 3,4,5 ஏடுகளில்
பிரசுரமாயின.

     புதிதாகக் கவிதை எழுதியவர்களில் ‘பசுவய்யா’ கவிதைகள் புதுமையும்
தனித்தன்மையும் பெற்றுவிளங்கின. மூன்றாது இதழில் வெளியான ‘உன் கை நகம்’
குறிப்பிடத் தகுந்தது.
 
  நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்
நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்.
அகிலமே சொந்தம் அழுக்குக்கு!
நகக் கண்ணும் எதற்கு அழுக்குக்கு!
‘பிறாண்டலாமே-எதிரியைப்
பிறாண்டலாமே?’
பிறாண்டலாம், பிடுங்கலாம்,
குத்தலாம், கிழிக்கலாம்.
ஆரத் தழுவிய
அருமைக் கண்ணாளின்
இடது தோளில்
ரத்தம் கசியும்.
வலது கை நகத்தை வெட்டியெறி-அல்லது
தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு.
தூக்கி சுமக்கும்
அருமைக் குழந்தையின்
பிஞ்சுத் துடைகளில்
ரத்தம் கசியும்.
இடது கை நகத்தை வெட்டியெறி-அல்லது
குழந்தை சுமப்பதை விட்டுவிடு.
நகத்தை வெட்டியெறி- அழுக்குச் சேரும்
நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்.
‘குறும்பை தோண்டலாமே-காதில்
குறும்பை தோண்டலாமே?’
குறும்பை தோண்டலாம்
குறும்பை தோண்டலாம்
குறும்பைக் குடியிருப்பு
குடலுக்குக் குடிமாற்றம்
குருதியிலும் கலந்துபோம்-உன்
குருதியிலும் கலந்துபோம்.