பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 88

பிச்சமூர்த்தி கட்டுரை


     புதுக்கவிதையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று ரீதியில்
எழுதுவதற்காகவே இத்தொடர் பிறந்தது. அதனால்தான் புதுக்கவிதையின் ஆரம்பகாலமான
1940களில் அம்முயற்சி சம்பந்தமாக இலக்கியப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட
பலரகமான அபிப்பிராயங்களையும் முழுக்கட்டுரைகளாக அவ்வப்போது எடுத்தெழுத
நேரிட்டது

     1960களில் புதுக்கவிதை புதிய வேகம் பெற்று வளரத் தொடங்கியது. அப்போதும்
அந்த முயற்சியைக் கேலி செய்தும். குறை கூறியும், கண்டித்தும் பேசியவர்களும்
எழுதியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களது எதிர்ப்புக்குப் பதில் கூறுவது
போல, ந.பிச்சமூர்த்தி எழுதிய கட்டுரை ‘எழுத்து’ (பிப்ரவரி 1961) 14வது ஏட்டில்
வெளிவந்தது.

     கருத்தாழம் கொண்ட, ‘வசன கவிதை’ என்ற அந்தக் கட்டுரையை அப்படியே
எடுத்தெழுதுவது, இவ் வரலாற்றுக்கு அவசியமானது என்று நான் கருதுகிறேன். சிந்தனைத்
தெளிவோடும் அழுத்தத்துடனும் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரை இன்றைய ரசிகர்களுக்கும்
இனிவரும் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 

வசன கவிதை


     “வசன கவிதை என்று கிடையாது, அது கவிதையே ஆகாது என்று ஒரு விமர்சகர்
கூறியிருக்கிறார். ஏன் இல்லை, ஏன் ஆகமுடியாது என்று தர்க்க ரீதியாக எனக்கு
விளங்கவில்லை. வசனமும் கவிதையும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை என்பது
உண்மைதான். வசனம் நமக்கு செய்தியைத் தெரிவிக்கிறது. நம்முடைய அறிவுக்கு
உணவாகப் புதிய விஷயங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. எனவே தபாலைப் போல்
இயங்குகிறது. கவிதை நம்முடைய அறிவுடன் தொடர்புகொள்ள முயல்வதில்லை. நம்முடைய
உணர்வுடன் உறவாட முயல்கிறது. நேரிடையாக உள்ளத்தைத் தொட்டு புதிய அனுபவத்தை
எழுப்ப முயல்கிறது. தனக்குள் எரியும் சுடர்கொண்டு மற்றொரு மனத்தையும் சுடர்
கொள்ளச் செய்கிறது. வசனம் லோகாயத உண்மையை அடிப்படையாகக் கொண்டது.
கவிதை மன நெகிழ்ச்சியை, மனஅசைவை அடிப்படையாகக் கொண்டது.

     ஆனால் வசனத்தை கவிதையைப் போல் செயல் படுத்த முடியாதா? கூடாதென்ற
நியதி உண்டா? இல்லை. அம்மாதிரி செயல்படும் பொழுது வசனம் தன் தொழிலை விட்டுக்
கவிதையின் தொழிலை ஏற்றுக் கொண்டு விடுகிறது என்றுதான் ஏற்படும். பார்வைக்கு
வசனம்; உண்மையில் கவிதை.

     மற்றொரு விஷயம். இப்பாகுபாடு தெளிவை உத்தேசித்து செய்யப்