பக்கம் எண் :

97  வல்லிக்கண்ணன்

என்கிறார். ஆனால் அவர் இன்று வசனகவிதைகள் என்ற தலைப்பில் வெளிவரும்
வார்த்தைச் சேர்க்கையில் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல, என்றும் கூறி இருக்கிறார்.
புதுக்கவிதையையும் வசன கவிதையையும் அவர் பிரித்துப் பேசி இருப்பது தெரிகிறது.

     யாப்புக்கும் கவிதை நடைக்கும் உள்ள உறவு பற்றிக் கூறுகையில், ‘யாப்பு’
முறையானது, பேச்சு அமைதியின் வேகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ரூபமேயொழிய
பேச்சு முறைக்கும் புறம்பான ஒரு தன்மையைப் பின்பற்றி வார்த்தைகளைச் சேர்ப்பதல்ல,
என்று குறிப்பிட்டிருக்கிறார். மேல் நாட்டு புதுக்கவிதை முயற்சிகளில் காணப்படும்
முக்கியமான அம்சங்களில் ஒன்று, பேச்சு வழக்கில் உள்ள இசைவான வார்த்தைகளையும்
வார்த்தைத் தொடர்களையும் கவிதையில் நிறையப் புகுத்துவது. பேச்சு அமைதியையும்
புதுக்கவிதைகளில் காணமுடியும். எனவே புதுக் கவிதைகள் அமைவதற்கு உதவுபவைகளில்
சொற்களின் முக்கியத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது கவிதைக்கு ஒலிநயம் போலவே
சொல் அமைவும் எவ்வளவு இன்றியமையாதவை என்பதைக் காட்டும் பின்வரும்
கு.ப.ரா.வின் கவிதை வரிகள்.
 
கவிகள் களைப்பின்றி காவியமியற்ற
நின் கண்கள் என்ன நிலைக்காக் கவர்ச்சியில்
கருமை தட்டியவை?
யுகம் யுகமாக மனிதனை
மாயை போல மயக்க
உன் கருவளையும் கையும்
என்ன சொற்சுவையில்
சுருதி சேர்ந்தவை?
மானிடன் மார்பில்
ஒவ்வொரு அடியிலும் எதிரொலிக்க
உன் கால் மெட்டி
என்ன வெள்ளி இசையில்
இன்பம் காட்டியது?
 
     இந்தச் செய்யுளுடன் பாரதியின் காட்சிகளில் உள்ள வரிகளை ஒப்பிட்டுப் பார்த்தால்
புதுக் கவிதைக்கும் வசன கவிதைக்கும் பல அம்சங்களில் உள்ள வித்தியாசம் தெரியும்.
பாரதியின் காட்சி வரிகளில் வரும் சொற்கள் ‘சிருஷ்டியின் அனுபவத்தைக் கூறும்
உணர்வுள்ள சொற்களாக’ இருக்கலாம். ஆனால் அவைகளின் சேர்க்கையிலே
இசைத்தன்மை பிறக்கவில்லை. ஆனால் கு.ப.ரா வின் கவிதையில் வரும் சொற்களும்
சொற்கோவைகளும் தங்கள் கருத்து, உணர்வு இசையினால் மட்டுமின்றித் தங்கள் ஒலி
இசைவினாலும் சிறப்பாக-முதன்மையாக-கவிதை ரூபத்திற்கு உதவி இருக்கின்றன.

     புதுக்கவிதை சத்தான, தாக்கான முயற்சி. அதன் எதிர் காலம், பழங்கவிதையின்
இயல்பும் சிறப்பும் அறிந்து மரபை மீறி மரபு அமைக்கும் வழியாக கவிதை உள்ளம்
படைத்தவர்கள் கையாளும் வழி வகைகளைப் பொறுத்து இருக்கிறது.