பக்கம் எண் :

10நாமக்கல் கவிஞர்

  
  தண்ணீர் விழுந்ததும் விதையின்றி
     தரையில் முளைத்திடும் புல் ஏது?
மண்ணிற் போட்டது விதையொன்று
     மரம்செடி யாவது யாராலே?
கண்ணில் தெரியாச் சிசுவையெல்லாம்
     கருவில் வளர்ப்பது யார்வேலை?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
     ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ!

எத்தனை மிருகம்! எத்தனை மீன்!
     எத்தனை ஊர்வன பறப்பன பார்!
எத்தனைப் பூச்சிகள் புழுவகைகள்!
     எண்ணத் தொலையாச் செடி கொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள்!
     எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த் தன்
     யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள்
     அரன் அரி யென்பார் சிலபேர்கள்
வல்லான் அவன்பர மண்டலத்தில்
     வாழும் தந்தை என்பார்கள்
சொல்லால் விளங்கா  ‘நிர்வாணம்’
     என்றும் சிலபேர் சொல்வார்கள்
எல்லா மிப்படிப் பலபேசும்
     ஏதோ ஒருபொருள் இருக்கிறதே!

அந்தப் பொருளை நாம் நினைத்து
     அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்
எந்தப் படியாய் எவர் அதனை
     எப்படித் தொழுதால் நமக்கென்ன?